

திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா
Madurai High Court Judgement on Thiruparankundram Karthigai Deepam Issue Case : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருப்பரங்குன்றம் திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாள் அன்று, திருப்பரங்குன்றம் கோவில் மலை மேல் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள பகுதியில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால், 1920ம் ஆண்டு வரை மலைமேல் உள்ள தீபத்தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது.
தீபம் ஏற்ற ஆங்கிலேயர் தடை
இரண்டாம் உலகப்போர், பாதுகாப்பை காரணம் காட்டி தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை ஆங்கிலேய அரசு தடை செய்தது. அதனால், கோவில் முன்புறம் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறவில்லை.
அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு
இதை மாற்றக்கோரியும், தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க உத்தரவிட கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு
பின்னர் தீர்ப்பு வழங்கிய அவர், மலை உச்சியில் இருக்கும் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார். ஆனால், நேற்று மாலை தீபம் ஏற்றப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் தீப தூணில் தீபம் ஏற்றவில்லை.
இந்து முன்னணியினர் போராட்டம்
இதனையடுத்து, தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் மலையை நோக்கி சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மனுதாரரான ராம ரவிக்குமார் தனி நீதிபதி உத்தரவின் பேரில் சிஆர்பிஎப் வீரர்களுடன் மலைக்கு செல்ல முயன்றார். ஆனால், அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தமிழக அரசு மேல்முறையீடு
இதனை தொடர்ந்து, நேற்றிரவே தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து சிஐஎஸ்எஃப் வீரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு அவசர வழக்காக நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பு வாதம்
அரசு தரப்பில் இருந்து வாதிட்ட வழக்கறிஞர் ரவீந்திரன், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பேரி கார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் மதப் பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகியது எனத் தெரிவித்தார்.
நீதிபதிகள் சரமாரி கேள்வி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆண்டிற்கு ஒருமுறை சில மணி நேரம் தீபம் ஏற்றுவது எவ்வாறு சமூகப் பிரச்சனையை உருவாக்கும் மற்றும் பதட்டமான சூழலை உருவாக்கும்?
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்ட சூழலில் எந்தவிதமான ஏற்பாடும் செய்யாமல் கோவில் நிர்வாகம் இருந்துள்ளது.
எனவே, தனி நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளார்?
மத நல்லிணக்கம் என்பது ஒருவரை ஒன்று செய்ய விடாமல் தடுப்பதில் அல்ல. இரு தரப்பும் இணைந்து, தங்களுக்கானவற்றை செய்து கொள்வதிலும் செய்ய அனுமதிப்பதிலும் தான் உள்ளது
இதையடுத்து இன்று பிற்பகல் நீதிபதிகள் அமர்வு தீர்ப்பினை வாசித்தது. அதன் விவரம் வருமாறு :
திருப்பரங்குன்றத்தில் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காக மனுதாரர் சிஆர்பிஎஃப்-ஐ அழைத்து சென்றதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை
அரசு ஏதோ ஒரு நோக்கத்துடன் வழக்கு தொடுத்து இருப்பதாக தெரிகிறது.
எனவே, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி
இந்த வழக்கில் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது.
தனி நீதிபதி உத்தரவில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தொடர்ந்து விசாரிப்பார் என, இரண்டு நீதிபதிகள் அமர்வு தனது தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறது.
=============================