விண்ணை பிளந்த அரோகரா கோஷம்: திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு விழா

Thiruparankundram Kumbabishekam 2025 : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Thiruparankundram Murugan Kumbabishekam 2025
Thiruparankundram Murugan Kumbabishekam 2025
1 min read

முருகனின் முதல்படை வீடு :

Thiruparankundram Kumbabishekam 2025 : முருகனின் முதல் படை வீடாக கருதப்படுவது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்காக, ரூ. 2.37 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து கடந்த10ம் தேதி, யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று மூலவர்களுக்கு காப்பு கட்டப்பட்டது.

திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம் 2025 நேரம் :

இன்று அதிகாலை 3:00 மணிக்கு மங்கள இசை முடிந்து, விக்னேஸ்வர பூஜை, பின்னர் 8ம் கால யாகசாலை பூஜை முடிக்கப்பட்டது(Thiruparankundram Kumbabishekam 2025 Timing). தீபாராதனை முடிந்து புனித நீர் அடங்கிய தங்க, வெள்ளிக் குடங்கள் யாகசாலையில் இருந்து கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ராஜகோபுரம், வல்லப கணபதி விமானம், கோவர்த்தனாம்பிகை அம்பாள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடந்தேறியது.

அதே நேரத்தில் பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு நடந்தது. மூலவர்களுக்கு மகா அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை நடைபெற்றது.

விண்ணை பிளந்த அரோகரா கோஷம் :

குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில்(Thiruparankundram) குவிந்தனர். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது. அதன்பின் மூலவர்களை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். குடமுழுக்கு விழாவைக் கண்டு களிக்க, 26 இடங்களில் மெகா திரைகள் வைக்கப்பட்டு இருந்தன.

ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிப்பு :

பத்து ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது, பக்தர்கள் பாதுகாப்புக்காக மூவாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள திருமண மண்டபங்களில் 4 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிறு, மூலவர் படம், விபூதி, இனிப்புகளுடன் பிரசாத பைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

மீனாட்சி, சுந்தரேஸ்வரர் வருகை :

குடமுழுக்கில் பங்கேற்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்(Madurai Meenakshi Amman) இருந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் நேற்று திருப்பரங்குன்றம் கோயிலுக்கு(Thiruparankundram Temple) வந்தனர். குடமுழுக்கு முடிந்த நிலையில், இன்று மாலை அவர்களை வழியனுப்பும் விழா நடைபெறுகிறது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in