

TVK Government Assembly Policy Announcements Tamil | Governor Speech 2026
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டப்பேரவை
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அதன் முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தமிழ்த்தாய் வாழ்த்துடன் மிகச் சிறப்பாகத் தொடங்கியது.
புதிய அரசின் கொள்கை விளக்கத்துடன் ஆளுநர் உரை
புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மாநில ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அவையில் கலந்துகொண்டு புதிய அரசின் கொள்கை விளக்கங்கள் அடங்கிய தொடக்க உரையை ஆற்றினார்.
தமிழக அரசியலில் புரட்சி
ஆளுநர் தனது உரையில், "கடந்த 1967-ல் பேரறிஞர் அண்ணாவும், 1977-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் நிகழ்த்திய அரசியல் மாற்றங்களைப் போல, இந்த 2026-ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு புதிய வரலாற்றுப் புரட்சி நடந்துள்ளது.
2 ஆண்டுகலில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த தவெக
வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே தவெக மக்கள் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழக அரசியல் வரலாற்றிலேயே புதிய பாதையாக, தவெக தலைவர் விஜய் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கியுள்ளார்" என்று பாராட்டினார்.
மேலும், பெரியார், அம்பேத்கர், காமராஜர் மற்றும் அண்ணா ஆகியோரின் வழியில் இந்த அரசு செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தலைவர்களின் பெயரை பிழயாக உச்சரித்து இருந்தால் மன்னிக்கவும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
ஆளுநர் உரையில் இடம்பெற்ற தவெக அரசின் முக்கியக் கொள்கை அறிவிப்புகள் பின்வருமாறு.
இருமொழிக் கொள்கை மற்றும் கல்வி நிதி
தமிழக அரசு இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து தீவிரமாகப் பின்பற்றும். மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை இந்த தவெக அரசு கடுமையாக எதிர்க்கிறது.
மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் ரூ. 4,000 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிதியை உடனடியாக நிபந்தனையின்றி மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
கடந்த ஆட்சியில் இது நடத்தப்படாத நிலையில், தவெக அரசு தற்போது 'சமூக நீதி சர்வே' என்ற பெயரில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை முறைப்படி நடத்தும்.
போதையில்லா தமிழகம் மற்றும் டாஸ்மாக் மூடல்
தமிழ்நாட்டைப் போதையற்ற மாநிலமாக மாற்றும் நோக்கில், முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் மதுக்கடைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்
நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் பெண்களின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் அதிரடிப்படை' உள்ளிட்ட சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
விளையாட்டு மற்றும் உள்கட்டமைப்பு
தமிழக இளைஞர்களுக்கு உலகத் தரத்திலான விளையாட்டுப் பயிற்சிகளை வழங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட 'ஒலிம்பிக் மையங்கள்' அமைக்கப்படும்.
முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் புதிய முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் உருவாக்கப்படும்.
காவிரி மற்றும் மேகேதாட்டு அணைப் பிரச்சினை
கர்நாடக அரசு மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதைத் தடுக்க தவெக அரசு கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கும்.
தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரைப் பெற உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு
பல ஆண்டுகளாக நீடிக்கும் தமிழக மீனவர்களின் எல்லைத் தாண்டிய பிரச்சினைகளுக்கு இந்த அரசு புதிய முயற்சிகள் மூலம் நிரந்தரத் தீர்வு காணும் என்று ஆளுநர் உரையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன், இயற்கை வளக் கொள்ளையைத் தடுத்தல், வெளிப்படையான டெண்டர் முறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சம உரிமை ஆகியவற்றுக்கும் இந்த அரசு முன்னுரிமை அளிக்கும் என்று ஆளுநர் தனது உரையில் விரிவாகத் தெரிவித்துள்ளார்.
======