
இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணி :
TVK Vijay Condemns Rahul Gandhi Arrest : தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வளாக்கத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணியாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் :
இது குறித்து தனது X தளப் பக்கத்தில் விஜய்(TVK Vijay) தெரிவித்து இருப்பதாவது, “கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் நான் பேசியபோது, நம் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். அதன் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் (Free and Fair Election) என்று வலியுறுத்தியிருந்தேன். அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தேன்.
முதலில் குரல் கொடுத்த தவெக :
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்(Bihar SIR) நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது.
“ஏற்கனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும் படிக்க : TVK 2nd Manadu : மதுரை தவெக மாநாட்டு தேதி : ஆகஸ்டு 21க்கு மாற்றம்
ராகுல் கைது, விஜய் கண்டனம் :
சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் பேரணியாக சென்ற போது, அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தது கண்டிக்கத்தக்கது” இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.