

வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு
TVK leader Vijay is waiting for election announcement to break ruling party's restrictions and campaign freely : “வீட்டுக்குள் இருக்கும் அரசியல்வாதி” என்ற பிம்பம் விஜய் மீது அழுத்தமாக படிந்து இருக்கிறது. ‘வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் களமிறங்கிய விஜய். கடந்த ஆண்டு செப்டம்பரில் திருச்சியில் தொடங்கிய பிரசாரம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விஜய்க்கு திரளும் கூட்டம்
அவருக்கு திரண்ட தன்னெழுச்சியாக கூட்டம், தமிழக அரசியல் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆளும் திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த விஜய், மாற்றத்துக்கான அவசியத்தை முன்வைத்து மக்கள் மத்தியில் உரையாடியது, எழுச்சியை ஏற்படுத்தியது.
கரூர் சம்பவத்தால் சிக்கல்
செப்டம்பர் மாதம் கரூர் கூட்ட நெரிசலில், 41 பேர் உயிரிழக்க, அதுவே விஜய் பிரசாரத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக மாறி விட்டது. இந்தத் துயரச் சம்பவத்தை முன்னிறுத்தி தமிழக அரசு கொண்டு வந்த கடுமையான வழிகாட்டு நெறிமுறைகள் (எஸ்ஓபி) விஜய்யின் பிரச்சாரத்தை ஏறத்தாழ முடக்கி விட்டன என்றே சொல்லலாம்.
வெறும் நிர்வாகிகள் கூட்டம் தான்
திறந்தவெளி வாகனப் பிரச்சாரத்துக்குத் தடை, ரோடு ஷோ கூடாது, நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் மக்கள் சந்திப்புக்குக் கடும் கட்டுப்பாடுகள், விஜயின் ‘நேரடி மக்கள் தொடர்பு’ பணிக்கு முட்டுக்கட்டையாக நிற்க, வெறும் 5 ஆயிரம் பேரை கூட்டி மட்டுமே நிர்வாகிகள் கூட்டத்தை தவெகவால் நடத்த முடிகிறது.
திமுக அரசு முடக்குகிறது
இனி விஜய் பிரசாரம் எப்படி இருக்கும், தினமும் மக்கள் சந்திப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா “ ஓராண்டாக விஜய்யின் எழுச்சியை முடக்குவதையே திமுக அரசு முழுநேர வேலையாகக் கொண்டுள்ளது.
தேர்தல் தேதி - எல்லாம் தலைகீழாகும்
ஒருபுறம் எஸ்ஓபி மூலம் தடுத்துவிட்டு, மறுபுறம் 'விஜய் வெளியே வரவில்லை' எனப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பிறகு நிலைமை தலைகீழாகும்.
விஜய்க்கான வழிகள் திறக்கப்படும்
காவல்துறை தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது, முதல்வரின் உத்தரவுகளோ, ஒருதலைப்பட்சமான தடைகளோ செல்லுபடியாகாது. அப்போது விஜய்க்காக அனைத்து சாலைகளும் திறக்கப்படும். தடையை உடைத்து அவர் சூறாவளிப் பிரச்சாரத்தை முன்னெடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம்
எனவே, தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பிறகு, சுதந்திரமாக விஜய் தமிழகம் முழுவதும் சூறாவளியாகச் சுழலும் போது, அது தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற இந்த பிரசாரம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் தமிழக வெற்றிக் கழகத்தினர் காத்துக் கிடக்கின்றனர்.
====