

பயமுறுத்திய ஜல்லிக்கட்டு காளை
வேலூர் மாவட்டம், அகரம்சேரி பகுதியில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், “ ஒரு குட்டி கதையுடன் பேச்சை தொடங்கினார்."ஒரு பெரிய ரோடு. பரபரப்பான பகுதி. ஆள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி. அந்த சந்திப்பில் ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை, யாரும் அருகில் செல்ல முடியவில்லை. யாராவது அதை அடக்கினால் தான் அருகில் செல்ல முடியும்.
காளையை அடக்கச் சென்ற சிறுவன்
கூட்டத்தில் இருந்த ஒருவராலும் காளையை அடக்க முடியவில்லை. காளை அவர்கள் அனைவரையும் அடித்து வீசியது. கடைசியாக ஒரு சின்ன பையன் காளையை அடக்க சென்றான். உனக்கு ஏன் இந்த வேலை. காளையிடம் தனியாக மாட்டிக் கொள்ளாதே என எல்லாரும் பரிதாப்பட்டார்கள். அருகில் செல்ல வேண்டாம் என்று எச்சரித்தார்கள்.
புல்லுக்கட்டை வீசிய சிறுவன்
ஆனால், அந்த சின்ன பையன் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பாக்கெட்டில் கைவிட்டு கொண்டு கெத்தாக சென்றான். காளை அவனை நோக்கி வர, அவன் காளையை நோக்கி சென்றார். காளை அருகில் வந்தவுடன் அவன் ஒரு புல்லு கட்டை எடுத்து நீட்டினான். காளை ஆக்ரோஷத்தை கைவிட்டு அமைதியாக சாப்பிட்டது. அந்த பையன் காளையை அப்படியே அருகில் உள்ள புல் காட்டிற்கு அழைத்து சென்று மேய்ச்சலுக்கு விட்டான்.
பசியோடு இருந்த காளை, கண்டுகொண்ட சிறுவன்
எப்படிப்பா அந்த காளையை அடக்கினே என்று அந்த பையனிடம் ஒரு பெரியவர் கேட்க, எனக்கு அந்த காளை கோபமாக இருந்ததாக தெரியவில்லை. பசியாக இருந்த மாதிரி தெரிந்தது. அதனால் புல்லு கட்டை நீட்டினேன் என்றான்.
தவெக யார்? மக்களுக்கு புரியும்
பெரியவரா? சிறியவரா? அது பிரச்னை இல்லை, எப்படி சரிசெய்கிறார்கள் என்பதே முக்கியம். அந்த முரட்டு ஜல்லிக்கட்டு காளை தான் தமிழ்நாடு அரசியல் களம். அந்த பெரியவர்கள் தமிழ்நாடு மக்கள். பாக்கெட்டிற்குள் கெத்தாக வலம் வந்தது நம் தவெக. இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும். " என்று விஜய் கூறினார்.
சொத்து விபரம் - வெளியிடத் தயாரா?
இங்கு சில அரசியல்வாதிகள் வாயை திறக்காமல் அமைதியாக இருந்தாலே போதும். அரசியல்வாதிகள் எல்லோருக்கும் ஒரு ஓப்பன் சேலஞ்ச் விடறேன். அவர்கள் தங்களின் சொத்து விபரத்தை வெளியிட முடியுமா.
அரசியலுக்கு வரும் முன்பு எவ்வளவு சொத்து, இப்போதுள்ள சொத்து எவ்வளவு என்று வெளியிட முடியுமா.அப்படி வெளியிட்டால் அது நல்ல வழியில் சம்பாதித்ததா அல்லது ஆட்டையை போட்டதா என தெரிந்து விடும்.
என் மீது சேற்றை வீசுவார்கள்
இதையெல்லாம் கேட்டால் என் மீது சேற்றை வாரி இறைப்பார்கள். எல்லோருக்கும் தெரியும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எண்ணம் இல்லை.
தீயசக்தியை ஸ்விட்ச் ஆஃப் செய்வதற்கான வாய்ப்பு தான் வருகிற தேர்தல். அப்போது விசில் சின்னம் பட்டனை பச்சக்கு.. பச்சக்கு என்று அழுத்தினால் போதும்" என்று விஜய் பேசினார்.
====