"TVK பரப்புரைக்கு முட்டுக்கட்டை" : திடீர் பள்ளங்கள் எப்படி வந்தன? : ஜனநாயகத்தின் மீது பாசிச தாக்குதல், விஜய் ஆவேசம்!

பெரம்பூரில் தான் மேற்கொள்ள இருந்த பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து இருப்பது, பாசிச தாக்குதல் என்று தவெக தலைவர் விஜய் சாடியிருக்கிறார்.
TVK leader Vijay slammed police's refusal to grant permission for his planned campaign in Perambur as fascist attack
TVK leader Vijay slammed police's refusal to grant permission for his planned campaign in Perambur as fascist attackgoogle
1 min read

சென்னையில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள இருந்த பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காததால், பரப்புரை மேற்கொள்ள முடியவில்லை.

ஜனநாயகத்தின் மீது பாசிச தாக்குதல்

இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்ட விஜய், “ தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.

திடீர் பள்ளங்கள்? எங்கிருந்து வந்தன?

நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.

ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?

திட்டமிட்டு மனு நிராகரிப்பு

இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3,000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு வெட்கமாக இல்லையா?

இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

அதிகாரிகளின் நேர்மை மீது சந்தேகம்

மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

திமுகவிற்கு அச்சம்

அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்” என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி.

எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!” இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.

======================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in