

தமிழக வெற்றிக் கழகம்
TVK Vijay Speech at Trichy East Assembly Constituency : சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
திருச்சியில் விஜய் மனுத்தாக்கல்
வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல்நாளான கடந்த 30ம் தேதி பெரம்பூரில் விஜய் தனது மனுவினை தாக்கல் செய்தார்.
இதையடுத்து இன்று திருச்சி சென்ற அவர், மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவரிடம் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
எம்ஜிஆர் சிலைக்கு மாலை
பின்னர் பாலக்கரை பகுதியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை செலுத்தினார். அங்கு கூடியிருந்த தொண்டர்கள் இடையே பரப்புரை மேற்கொண்ட விஜய், ”எல்லாரும் நல்லா இருக்கீங்களா, கேஸ் பிரச்னை சரியாயிடுச்சா. சமையல் எரிவாயு பிரச்னையால் ஓட்டல்கள் மூடி விட்டாங்க.
என்னை 100% நம்பலாம்
இதனால் எவ்வளவு கஷ்டங்கள். இந்தப் பிரச்னை தனக்கு சம்பந்தம் இல்லை என்பது போல முதல்வர் இருக்கிறார்.
திமுகவையும் நம்பாதீங்க, பாஜகவையும் நம்பாதீங்க. ஆனால் 100% என்னை நீங்கள் நம்பலாம். எனவே, எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.
திமுகவுக்கு சரமாரி கேள்வி
கேஸ் மானியம் ரூ.100, பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட தீர்வு காணப்படும் என்று சொன்னீர்களே, செய்தார்களா எனவும் திமுகவை நோக்கி விஜய் கேள்வி எழுப்பினார்.
செய்ய முடியாத வாக்குறுதிகளைத்தான் ஸ்டாலின் சொல்வார் எனவும் விமர்சித்தார்.
நாங்கள் சொல்வதை செய்வோம்
நாங்கள் சொல்வதை செய்வோம். அன்னபூரணி கேஸ் திட்டம் நிறைவேற்றப்படும். ஆறு சிலிண்டர் வழங்கப்படும். பெண்கள் அனைவரும் எந்த பேருந்தில் வேண்டுமானாலும் இலவசமாக செல்லலாம்.
மருத்துவம், குடிநீர் வசதி, பஸ் போக்குவரத்து வசதி, இது போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படும்.
அமைச்சர் நேரு மீது விமர்சனம்
இங்கு ஒரு மந்திரி இருக்கிறார். நகராட்சி துறையில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் ஏமாற்றுகிறார். வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியுள்ளார்.
வேலை வாங்கித் தராமல், நகராட்சித் துறையில் மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் என்றால் மற்ற துறைகளை பாருங்கள்.
குறிப்பாக கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு அந்த போஸ்டிங்கிற்கு 2,000 பேருக்கு மேல் வேலை கொடுக்கவில்லை.
வெறும் ஐந்து பேருக்கு மட்டும் வேலை வழங்கப்பட்டுள்ளதாக விஜய் குற்றம்சாட்டினார்.
சூழ்ச்சியால் ‘ஜனநாயகன்’நிறுத்தம்
கூட்டு சூழ்ச்சி செய்து ஜனநாயகன் படம் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டிய விஜய், "தனக்கும், மக்களுக்கும் நீதி வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
கட்டாயம் வாக்களியுங்க!
தேர்தல் நாளன்று வீட்டில் இருக்கிற அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள். வெளியில் இருக்கிறவர்களையும் வர வையுங்கள். அசால்டாக இருந்து விடாதீர்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்று விஜய் பிரசாரம் செய்தார்.
====