குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் : முதல்வர் விஜய் உறுதி!

Anti Child Labour Day: ஜூன் 12 சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் விடுத்துள்ள விழிப்புணர்வுச் செய்தி மற்றும் தமிழக அரசின் முக்கிய திட்டங்கள்.
We will make Tamil Nadu a child-labour-free state: CM Vijay pledges!
We will make Tamil Nadu a child-labour-free state: CM Vijay pledges!source: google
1 min read

We will make Tamil Nadu a child-labour-free state: CM Vijay pledges!

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக உலகெங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் நாள் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலம்

அதில், குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டில் இடம்பெற்றுள்ள விவரங்கள் பின்வருமாறு:

"கல்வி பயிலும் இனிய பருவமே குழந்தைப் பருவம்"

முதலமைச்சர் விஜய் தனது செய்தியில், "துள்ளித் திரிந்து விளையாடி, பள்ளிக்குச் சென்று கல்வி பயிலும் இனிய பருவமே குழந்தைப் பருவமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு குடும்பச் சூழ்நிலைகள் மற்றும் கட்டாயங்களின் காரணமாக வேலைக்கு செல்லும் குழந்தைகளை, அக்கொடுமையிலிருந்து முழுமையாக விடுவிக்க வேண்டியது அவசியம்.

அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தினையும், முறையான கல்வியினையும் தங்குதடையின்றி வழங்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திரமாக வாழும் உரிமை மறுப்பது இயற்கை நீதிக்கு எதிரானது

ஒவ்வொரு குழந்தைக்கும் சுதந்திரமாக வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் கல்வி உரிமை போன்றவை அத்தியாவசியமானவை ஆகும். இவற்றை வழங்க மறுப்பது இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் முற்றிலும் எதிரான செயலாகும்.

குழந்தைகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எதிராக எந்தவகையான தொழில்களிலும், குறிப்பாக வளரிளம் பருவத்தினரை ஆபத்தான தொழில்களில் பணியமர்த்துவது சட்டப்படி முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அரசின் முக்கிய குறிக்கோள்

குழந்தைகளை தொழிற்பணிகளில் ஈடுபடுத்தாமல் அவர்களுக்கான உரிமைகளைப் பேணிக்காப்பது, முறையான கல்வி அளிப்பது மற்றும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை அவர்கள் பெறுவதை உறுதி செய்வதுடன் ஒரு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதையே தமிழ்நாடு அரசு தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்திடத் தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சமூகத்திற்கும், பெற்றோர்களுக்கும் வேண்டுகோள்

குழந்தைத் தொழிலாளர்கள் உழைப்பின் மூலம் பெறப்படும் வருமானம் வீட்டிற்கும், நாட்டிற்கும் சிறுமை என்பதை சமூகமும், பெற்றோர்களும் ஆழமாக உணர வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் முழு துணையாக நிற்க வேண்டும்.

முதல்வர் விஜய்யின் முழக்கம்

"குழந்தைத் தொழிலாளர் முறையைத் தகர்ப்போம்! கல்வி அளித்து குழந்தைகளின் வாழ்வை ஒளிரச் செய்வோம்!" என்ற முழக்கத்துடன், குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம் என முதலமைச்சர் விஜய் தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in