

"When will Chief Minister Vijay begin to act 'responsibly'?" asks MP Kanimozhi.
தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை
தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை ஏமாற்றி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் என கூறப்படும் இருவரைப் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கனிமொழி எம்.பி கண்டனம்
இச்சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தின் பின்னணி
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் தவெக நிர்வாகி ராமநாதபுரத்தைச் சேர்ந்த அவரது நண்பர் ஜெயபால் ஆகிய இருவரும் இணைந்து இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேலை வாங்கித்தருவதாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை?
பாதிக்கப்பட்ட ஏரல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தங்களது காரில் அழைத்து சென்றதாகவும் பின்னர், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலுள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்து அங்கு அந்தப் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
போலீஸ் நடவடிக்கை மற்றும் கண்டனம்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த பெண் போலீசார், தலைமறைவாக இருந்த பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்திற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கனிமொழி எம்.பி.எக்ஸ் பதிவு
அந்த பதிவில், திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
'பொறுப்புடன்' முதலமைச்சர் விஜய் செயல்பட போவது எப்போது?
பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து 'பொறுப்புடன்' முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செயல்பட போவது எப்போது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
=====