

ஐநா பொதுச்சபை கூட்டம் :
Donald Trump Speech in United Nations General Assembly (UNGA) : ஐக்கிய நாடுகள் சபையினர் 80வது பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார். அமெரிக்க அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்ற டோனால்டு டிரம்ப், கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
ஏழு போர்களை நிறுத்தி விட்டேன் :
”அதிபராக பொறுப்பேற்ற பிறகு கடந்த ஏழு மாதங்களில் உலக அளவில் ஏழு ஆயுதப் போர்களை தடுத்து நிறுத்தி இருக்கிறேன். இதில் இந்தியா - பாகிஸ்தான் போரும்(India Pakistan War) அடங்கும். சில போர்கள் நீண்ட காலம் நடந்து வந்தன. சிலவற்றால், அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயமும் இருந்தது.
எனக்கு பாராட்டு கிடைக்கவில்லை :
என்னுடைய தலையீடு காரணமாகவே இந்த போர்கள் சுமுகமாக முடிவுக்கு வந்தன. ஐநா சபை செய்ய வேண்டிய வேலையை நான் செய்து இருக்கிறேன். ஆனால், அதற்கான பாராட்டுகள் எனக்கு கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதை நான் தடுத்து நிறுத்தியுள்ளேன்.
ஐநா சபை மீது டிரம்ப் குற்றச்சாட்டு :
இந்த போர்களை நிறுத்துவதற்கு எந்த முயற்சியையும் ஐக்கிய நாடுகள் சபை எடுக்கவில்லை. இது மட்டுமின்றி எனக்கு எந்த உதவியையும் செய்யவும் முன்வரவில்லை. மற்ற நாடுகள் எல்லாம் போர்களை வேடிக்கை மட்டுமே பார்த்தன.
ரஷ்யா - உக்ரைன் போர் - நிச்சயம் தடுப்பேன் :
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரை(Russia Ukraine War) முடிவுக்கு கொண்டு வருவதற்கு நான் மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சீனா போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம், இந்தப் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்கி வருகின்றன. இதனால், இந்தப் போரை நிறுத்த முடியவில்லை. எனவே, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளேன்.
உலக நாடுகளுக்கு டிரம்ப் கண்டனம் :
இதைப்போன்றே, மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போரும் முடிவுக்கு வரவில்லை. அதற்கு தேவைப்படும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். பாலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்பதன் மூலம், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, உலக நாடுகள் ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகின்றன. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஐரோப்பிய நாடுகளுக்கும் எச்சரிக்கை :
அமெரிக்காவுக்கு பொன்னான காலம் தொடங்கி விட்டது. இதற்கு முக்கிய தடையாக இருந்தது, சட்டவிரோதமாக புலம் பெயர்ந்துள்ள மக்கள். அதனால்தான், இந்த விஷயத்தில் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன். அதற்காகவே, விசா கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த விஷயத்தில் எச்சரிக்கை விடுக்கிறேன். புலம் பெயர்ந்தோரை கட்டுப்படுத்தா விட்டால், மிகப் பெரிய பாதிப்புகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க : ரஷ்யாவிடம் கூடுதலாக கச்சா எண்ணெய் : அமெரிக்காவை அதிர வைத்த இந்தியா
உலகத் தலைவர்களுக்கு அழைப்பு :
1776ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி அமெரிக்கா சுதந்திரம்(America Independence Date & Year) பெற்றது. இதன், 250 வது ஆண்டு விழாவை, 2026ல் கொண்டாட இருக்கிறோம். வரலாற்று சிறப்புமிக்க இதற்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும்படி உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்” இவ்வாறு டொனால்டு டிரம்ப் உரையாற்றினார்.
======