

தங்கம் மற்றும் வெள்ளி விலை தாறுமாறு உச்சம்
Dubai launches new gold district and world's first gold street : உலக நாடுகள் போர் பதற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. தங்க முதலீட்டாளர்களே திணரும் அளவிற்கு தங்கத்தின் விலையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளதால், தங்கத்தின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.
துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் அறிமுகம்
இந்நிலையில், துபாயில் தேரா என்னும் பகுதியில்உலகின் முதல் தங்கத்திலான தெரு மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையகங்களைக் கொண்ட 'துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்' பிரம்மாண்டமான தங்க வளாகம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டம், தங்க நகை வர்த்தகத்தையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் முக்கிய இடமாக அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது துபாயை நகை வர்த்தகத்திற்கான உலகின் முன்னணி மையமாக வலுப்படுத்தும் முயற்சியாகும். இந்த வளாகத்தில் மொத்தம் சுமார் 1000 நகை வர்த்தக நிறுவனங்கள் தங்கள் கடைகளை நிறுவ உள்ளன. சில்லறை விற்பனை, மொத்த வியாபாரம் மற்றும் முதலீடு ஆகியவைகளை உள்ளடக்கிய செயல்பாடுகளைக் கொண்ட நிறுவனங்கள் இந்த வளாகத்தில் செயல்பட உள்ளது. தங்கம் மற்றும் நகைகள், வாசனை திரவியங்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அலங்காரப் பொருட்கள் ஆகியவைகளின் விற்பனை நிறுவனங்களும் ஒரே இடத்தில் அமைய இருக்கின்றன.
தங்களது கிளையை நிறுவும் பிரம்மாண்ட தங்க நகைகடைகள்
பிரம்மாண்டமான வணிக மையமாகத் திகழும் வகையில் ஜோஹரா ஜுவல்லரி, மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் மற்றும் தனிஷ்க் போன்ற பெரிய ஜுவல்லரி கடைகளும் தங்களின் பிரம்மாண்டமான கிளைகளை அங்கு நிறுவி உள்ளன. இதில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமான கிளையை இந்த வளாகத்தில் நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன் இந்த கிளை மத்திய கிழக்கு பிரதேசத்தில் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிலையம் என்ற பெருமையை சேர்க்க உள்ளது.
அகமது அல் காஜா உரை
துபாய் தங்க வளாகத்தின் அறிமுக நிகழ்ச்சியில் சுற்றுலா துறையின் ஒரு அங்கமான துபாய் விழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி அகமது அல் காஜா கூறுகையில், தங்கம் துபாயின் கலாச்சாரம் மற்றும் வணிக கூட்டமைப்பில் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது என்றும், இது பாரம்பரியம், செழிப்பு மற்றும் நீடித்து கட்டமைக்கும் உணர்வை குறிக்கிறது என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் இந்த குறிப்பிடத்தக்கத் திட்டம் மூலம் படைப்பாற்றல் மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த ஒரு சகாப்தம் படைப்பதற்காக காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
இதில் சாலை மற்றும் உள்கட்டமைப்புகள் தங்கத்தில் அமைக்கப்படுமா போன்ற விவரங்கள் குறித்து விரைவில் வெளியிடப்படும் என துபாய் நகை குழும அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி தங்கம், வைரத்திற்கு ஈடாக வளர்ந்து வரும் நிலையில், துபாய் தங்கத்திற்கு என ஒரு தனி இடத்தை உருவாக்கி கோல்டு டிஸ்டிரிக்ட் என பெயரிட்டு, தங்கத்தை முன்னிறுத்தி தனி கவனம் கொண்டு இதனை செய்வது என்பது ஆச்சரியத்திற்குரிய ஒன்றுதான் என்றால் மிகையாகாது.