
இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாட்களாக நடைபெற்று வந்த சண்டை ஒருவழியாக முடிவுக்கு வந்து இருக்கிறது.
இதுதரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவும் தாக்குதலை நடத்தி, பிரச்சினையை தீவிரப்படுத்தியது.
உலகப் போர் மூண்டு விடுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காத அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல், ஈரான் மீதான தாக்குதலின் இலக்குகளை அடைந்ததால், போர் நிறுத்தத்தை ஏற்பதாக அறிவித்தது.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரானுக்கு எதிரான ஆபரேஷன் ரைசிங் லயனின் அனைத்து நோக்கங்களையும் இஸ்ரேல் அடைந்துவிட்டது.
இதன் மூலமாக ஈரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக நீக்கியுள்ளோம்.
ஈரான் வான்வெளியில் முழு வான் கட்டுப்பாட்டையும் கைப்பற்றி, ஈரான் அரசுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தினோம்.
எங்கள் இலக்குகளை அடைந்ததை அடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் போர்நிறுத்தத்திற்கான முன்மொழிவை ஏற்கிறோம்.
அதேசமயம், அத்துமீறல் நடந்தால் இஸ்ரேல் வலுவாக பதிலளிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க போவதில்லை என்று முதலில் மறுப்பு தெரிவித்த ஈரான், தற்பொது, அதை ஏற்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுபற்றி பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “இஸ்ரேல் தான் ஈரான் மீது முதலில் போர் தொடுத்தது.
அந்தநாடு தாக்குதலை நிறுத்தினால், நாங்கள் நிறுத்தி விடுவோம்.
பதிலடியை தொடரும் நோக்கம் எங்களுக்கு இல்லை.” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இருநாட்டு போரால், எத்தகைய விளைவுகள் ஏற்படுமோ என்ற கவலை உலகையே தொற்றிக் கொண்டிருந்த நிலையில், இருவரும் அமைதி வழிக்கு வந்திருப்பது, நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.
=====