

எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்கும் மோடி:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
மாநாட்டின் ஓரமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம் இந்தியா வரும் புடின் :'
இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதற்கான மற்றொரு காரணம், அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வர உள்ளதாக கூறப்படுவதுதான்.
இதனால் கிர்கிஸ்தானில் நடைபெறும் இந்த சந்திப்பு, பிரிக்ஸ் மாநாட்டுக்கு முன்பான முக்கிய ஆலோசனையாக பார்க்கப்படுகிறது.
இந்தியா - ரஷ்யா உறவில் புதிய கட்டம்?
பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் ரஷ்யா தொடர்ந்து நெருக்கமான உறவை பேணி வருகின்றன.
தற்போதைய உலக அரசியல் சூழலில் மோடி - புடின் சந்திப்பு இரு நாடுகளின் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாடுகளின் கவனம் :
உக்ரைன் போர், மேற்கு நாடுகள் - ரஷ்யா இடையேயான பதற்றம் மற்றும் பல்முனை உலக ஒழுங்கு குறித்து நடைபெற்று வரும் விவாதங்களின் பின்னணியில் இந்த சந்திப்பு நடைபெறுவதால், சர்வதேச அரசியல் வட்டாரங்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
பிரிக்ஸ் மாநாட்டுக்கு முன் முக்கிய ஆலோசனை :
இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உலக பொருளாதாரம், வர்த்தகம், வளர்ந்து வரும் நாடுகளின் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
அதற்கு முன்னதாக மோடி - புடின் சந்திப்பு நடைபெறுவது, இந்தியா - ரஷ்யா உறவுகளுக்கு மட்டுமல்லாமல் பிரிக்ஸ் கூட்டணியின் எதிர்கால திசைக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது.