

வெனிசுலா
US Launches Airstrike on Venezuela and Captures President Nicolas Maduro, Donald Trump says : எண்ணெய் வளம், சர்க்கரை உற்பத்தியில் முன்னிலையில் உள்ள வெனிசுலா, சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் - வெனிசுலா
வெனிசுலா அதிபராக இருக்கும் நிக்கோலஸ் மதுரோ இதற்கு முக்கிய காரணம் என்று அமெரிக்க குற்றம்சாட்டி வருகிறது. அமெரிக்காவில் போதைப்பொருள் விற்பனைக்கு வெனிசுலாவின் பின்னணியே காரணம் எனத் தொடர்ந்து கூறி வரும் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், அதிபர் மடுரா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்து இருந்தார்.
வெனிசுலா மீது பொருளாதார தடை
அமெரிக்கா மீது வெனிசுலா ‘போதைப் பொருள் பயங்கரவாதம்’ நிகழ்த்துவதாக சாடிவந்த டிரம்ப், வெனிசுலாவுக்கு பொருளாதாரத் தடைகள் விதித்ததோடு, அதன் கடற்பரப்புக்குள் எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்தையும் முடக்கினார்.
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்
இந்தநிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், இன்று அதிகாலை வெனிசுலா தலைநகர் கராகஸ், வான் தாக்குதலில் அதிர்ந்தது. அமெரிக்க போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீச, ராணுவ தளங்கள் தீப்பற்றி எரிந்தன. 7 இடங்களை குறி வைத்து தாக்குதல் தொடுக்கப்பட்டது.
அதிர்ந்த தலைநகர் கராகஸ்
பயங்கர சத்தத்துடன் கரும்புகை கிளம்பியதால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்தனர். காதை கிழிக்கும் சத்தத்துடன் அமெரிக்க போர் விமானங்கள் தாழ்வாக பறந்து, கராகஸ் நகரை அதிரச் செய்தன.
தாக்குதலை உறுதி செய்த டிரம்ப்
வெனிசுலா மீது வான்வெளி தாக்குதல், அதாவது போர் விமானங்கள் குண்டுமழை போழிந்ததை, அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி செய்து இருக்கிறார்.
” அமெரிக்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்க போர் விமானங்கள் வான்வழி தாக்குதலை நடத்தின. வெனிசுலா மீது பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக அமெரிக்கா நடத்தியுள்ளது
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி தலைநகர் கராஸில் இருந்து சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்" என்று டிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்கா கொண்டு செல்லப்படும் மடுரொ
விரைவில் அவர்கள் அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிகிறது. வெனிசுலா அதிபரின் நடவடிக்கைகளை ஒருமாத காலமாக துல்லியமாக கண்காணித்து வந்த அமெரிக்கா, அவரது சிறைபிடிப்பை திட்டமிட்டபடி செய்து முடித்து இருப்பதாக கூறப்படுகிறது.
களத்தில் டெல்டா படை
அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படை கராகஸ் நகரில் களமிறக்கப்பட்டு, தாக்குதல் மற்றும் சிறைப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து மடுரொ பாதுகாப்பாக மறைவிடம் ஒன்றில் பதுங்கியதாகவும், அந்த இடத்தை கண்டுபிடித்த டெல்டா படையினர் அவரை சிறைப் பிடித்ததாகவும் தெரிகிறது.
===========