

சர்ச்சை நாயகன் டொனால்டு டிரம்ப்
Donald Trump US 500% Tariff Bill on Russian Oil Import countries India, China : அமெரிக்க அதிபராக 2வது முறை பொறுப்பேற்றதில் இருந்து அதிபர் டொனால்டு டிரம்ப் உலக அளவில் சர்ச்சையை கிளப்பி வாதங்களை எழுப்பி வருகிறார். பொருளாதார தடைகள், கூடுதல் வரி விதிப்புகள், ஈரான், வெனிசுலா மீது தாக்குதல் போன்றவை டிரம்பின் அதிரடிகள்.
ரஷ்யா மீது அமெரிக்கா கோபம்
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்ட டொனால்டு டிரம்ப் எடுத்த எந்த முயற்சியும் பலன் கொடுக்கவில்லை. இந்தியா போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதால், அதன் மூலம் கிடைக்கும் தொகையை பயன்படுத்தி ரஷ்யா போரை தொடர்கிறது என்பது தான் அமெரிக்காவின் முக்கிய குற்றச்சாட்டு.
இந்திய பொருட்களுக்கு 50% வரி
எனவேதான், இந்திய பொருட்கள் மீது 50% வரியை டிரம்ப் விதித்தார். இது இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதே உண்மை. மாஸ்கோவை பொருளாதார ரீதியாக முடக்கும் நோக்கில் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க உள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா தனது அழுத்தத்தை மிகக் கடுமையாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
500% வரி விதிக்கும் மசோதா
இதற்காக 500% வரை இறக்குமதி வரி விதிக்க வழிவகுக்கும் இருகட்சி மசோதாவிற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
500% வரை இறக்குமதி வரி
இந்த முன்மொழியப்பட்ட மசோதா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் யுரேனியம் வாங்கும் நாடுகளை இலக்காகக் கொண்டுள்ளது. குறிப்பாக, ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் அதிகளவில் எண்ணெய் வாங்கி வரும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை குறிவைத்து இந்த மசோதா கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க கட்சிகள் ஒப்புதல்
அதிபர் டிரம்ப்பைச் சந்தித்த பிறகு, இந்த மசோதாவிற்கு அவர் ஒப்புதல் அளித்திருப்பதாக செனட்டர் கிரஹாம் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த வாரமே இந்த மசோதா செனட் சபையில் வாக்கெடுப்பிற்கு வரக்கூடும்.
ரஷ்ய பொருளாதாரத்தை முடக்க முயற்சி
இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதற்கு அதிபரின் அதிகாரத்தை இந்த சட்டம் வலுப்படுத்தும் என்று கிரஹாம் கூறியுள்ளார். உக்ரைன் அமைதி முயற்சிக்கு ஒத்துழைத்தாலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எந்த விட்டுக் கொடுத்தலுக்கும் முன்வராததால், ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்க இத்தகைய கடுமையான நடவடிக்கை அவசியம் என்று அவர் வாதிட்டார்.
இந்தியாவை குறி வைக்கும் அமெரிக்கா
சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு, இந்தியப் பொருட்களுக்கு 25% பரஸ்பர வரியையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பான கூடுதலாக 25% அபராதத்தையும் டிரம்ப் நிர்வாகம் விதித்திருந்தது.
அமெரிக்கா - இந்தியா விரிசல் அதிகமாகும்
புதிய மசோதா ஒப்புதல் பெற்றால், அமெரிக்கா - சீனா மற்றும் அமெரிக்கா - இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளில் மேலும் விரிசல் ஏற்படக்கூடும். ஏற்கனவே சீனப் பொருட்கள் மீது 145% வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக பெய்ஜிங்கும் வரி விதித்துள்ளது.
டிரம்ப் கொண்டு வந்துள்ள மசோதாவின் முக்கிய அம்சங்கள்
* ரஷ்யாவுடன் எரிசக்தி வணிகத்தைத் தொடரும் நாடுகள் மீது 500% வரை அபராத வரி விதிக்க டிரம்பிற்கு அதிகாரம்
* ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் கிடைக்கும் பணம், மறைமுகமாக மாஸ்கோவின் போர் முயற்சிகளுக்கு நிதி வழங்குகிறது என்பது அமெரிக்காவின் வாதம்
* செனட்டர் கிரஹாம் (குடியரசுக் கட்சி) மற்றும் ரிச்சர்ட் புளூமெண்டல் (ஜனநாயகக் கட்சி) ஆகியோரால் கூட்டாக முன்மொழியப்பட்டுள்ளது.
* ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவின் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதை இது காட்டுகிறது .
====================