

ஈரான் மீதான தாக்குதல்
Russia to ban Gasoline Exports from April 1 amid West Asia Tensions : இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் 29வது நாளாக நீடிக்கிறது. அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்தி இருந்தாலும், இஸ்ரேல் சண்டையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருவதால், வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது.
ஹோர்முஸ் நீரிணையை மூடி வைத்துள்ள ஈரான், அந்த வழியாக இந்தியா, சீனா போன்ற நாடுகளின் கப்பல்களை மட்டுமே அனுமதிக்கிறது.
எனவே, மற்ற நாடுகளின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் கப்பல்கள், வளைகுடா கடல் பகுதிகளில் காத்துக் கிடக்கின்றன.
இதன்காரணமாக உலக நாடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பெட்ரோல் ஏற்றுமதி
இதனிடையே, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வந்தன. இதன் அந்த நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்க முடிகிறது. இதற்கும் பிரச்னை வந்து விட்டது.
ஏற்றுமதி அதிரடியாக நிறுத்தம்
உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு பிற நாடுகளுக்கு பெட்ரோல் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு இந்திய எரிபொருள் சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பதறும் உலக நாடுகள்
ஒரு பக்கம் ஈரானால் முடக்கப்பட்ட எரிபொருள் சப்ளை, மற்றொருபுறம் ரஷ்யாவுடன் சப்ளையை துண்டித்தால், நிலைமை மிகவும் மோசமாகி விடும். ஏப்ரல் 1 முதல் பிற நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று ரஷ்யா அறிவித்து விட்டது. அதன்படி, தினமும் 20 லட்சம் பீப்பாய் எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு விடும்.
உள்நாட்டு தேவை - ரஷ்யா முடிவு
கச்சா எண்ணெய் எடுக்கும் நிலையங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலால் இந்தநிலை உருவாகி இருக்கிறது. உள்நாட்டு தேவையை சமாளிக்க வேண்டி இருப்பதால், இந்த முடிவினை எடுத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்கவும், பெட்ரோல் விலைகளை கட்டுப்படுத்தவும் உதவும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்ட நோவாக் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பாதிப்பு
இந்தியா ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் கூட்டாளி. நமக்கு தினமும் சுமார் ஒரு லட்சம் பீப்பாய் வரை இறக்குமதி தேவை உள்ளது.
இது தடைபட்டால் பெட்ரோல், டீசல் விநியோக சங்கிலி உடைபடும். இதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பொருளாதார லாக்டவுன்
ஏற்கனவே, பல நாடுகளில் பொருளாதார லாக்டவுன் அமலில் இருக்கும் நிலையில், இந்த நிலை இந்தியாவுக்கு வருமோ என்ற நிலை உருவாகி இருக்கிறது.
எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவை அதிகமாகச் சார்ந்துள்ள இந்தியா, மாற்று ஆதாரங்களை தேட வேண்டி இருக்கிறது.
------------