

The Middle East Becomes a Battlefield: Iran Issues Stern Warning to the US—Risk of Agreement Collapse!
இஸ்ரேல், அமெரிக்க ஈரான் போர்
லெபனானில் இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்தால் அமெரிக்காவுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்தாகும் என ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் ஏவுகணை மோதலால் மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் உச்சம்!
உச்சத்தை எட்டிய போர்ப்பதற்றம்
மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.
தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து?
லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தனது ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்தால், அமெரிக்காவின் மறைமுக பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்று ஈரான் அரசு அதிரடியாக எச்சரித்துள்ளது.
இந்த விவகாரத்தால், அமெரிக்காவுடன் தூதரக ரீதியாக மறைமுகமாக நடத்தி வந்த பேச்சுவார்த்தைகளையும் ஈரான் தற்போது இடைநிறுத்தம் செய்துள்ளது.
இஸ்ரேலின் தீவிரத் தாக்குதலும் இடப்பெயர்வும்
பாதுகாப்பு ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த லெபனானின் பியுபோர்ட் கோட்டையை இஸ்ரேல் அண்மையில் கைப்பற்றியது. இதன் மறுநாளே, தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டார்.
போர் நிறுத்த விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு
ஏப்ரல் இறுதியில் எட்டப்பட்ட போர்நிறுத்த விதிகளை ஹிஸ்புல்லாக்கள் பலமுறை மீறிவிட்டதாக நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தொடர் மோதல்களால் லெபனானில் இருந்து ஏற்கனவே 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தங்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
நீடிக்கும் இழுபறி
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஏப்ரல் 8 முதல் தற்காலிக போர்நிறுத்தம் அமலில் இருந்து வருகிறது. இதனை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கவும், ஹோர்முஸ் நீர்இணையை மீண்டும் திறக்கவும் அண்மையில் ஒரு புதிய உடன்பாடு எட்டப்பட்டது.
டிரம்பின் முயற்சிக்கு முட்டுக்கட்டை
இந்த உடன்படிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் தலைவர்களின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
ஈரானுடன் ஒரு சுமுகமான ஒப்பந்தத்தை எட்ட டிரம்ப் விரும்பிய நிலையிலும், தற்போது இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் எடுத்துள்ள இந்த புதிய நிலைப்பாடு கடந்த 2 மாதங்களாக நீடித்து வரும் அமைதி முயற்சிகளை மீண்டும் முட்டுக்கட்டையாக்கி, சிக்கலாக்கியுள்ளது.
'எக்ஸ்' தளத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை
இதுகுறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தம் என்பது லெபனான் உட்பட அனைத்து முனைகளுக்கும் பொதுவானது.
இதில் ஒரு முனையில் இஸ்ரேல் மீறல் செய்தாலும், அது ஒட்டுமொத்த போர்நிறுத்தத்தையும் மீறுவதற்குச் சமம். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அரசுசார் செய்தி நிறுவனம் தகவல்
மேலும், இஸ்ரேலையும் அதற்கு ஆதரவளிப்பவர்களையும் தண்டிக்கும் விதமாக ஈரான், ஏமன், லெபனான், மற்றும் இராக்கில் உள்ள அதன் கூட்டாளிகளை உள்ளடக்கிய 'எதிர்ப்பு முன்னணியானது பாப் எல் மண்டேப் நீர்இணையை முழுமையாக மூடுவதற்கான கூட்டுத் திட்டத்தை வகுத்துள்ளதாக ஈரானின் அரசுசார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே நேரடி மோதல்
இதற்கிடையே சர்வதேச கடல் பகுதியில் பறந்த அமெரிக்காவின் அதிநவீன ட்ரோன் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதற்குப் பதிலடியாக, ஈரானின் ரேடார் மற்றும் ட்ரோன் தளங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் வார இறுதியில் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியது.
ஏவுகணை தாக்குதல்
இதற்குப் பழிவாங்கும் விதமாக, குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் ஒன்றின் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
ஈரானின் இந்த ஏவுகணைகளை அமெரிக்க மற்றும் குவைத் கூட்டுப் படைகள் நடுவானில் இடைமறித்து அழித்துள்ளன. இந்த அடுத்தடுத்த நேரடித் தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளன.
இந்நிலையில், தற்போது இஸ்ரேல் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இடையிலான தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
=====