

ஈரான் மீது 5வது நாளாக தாக்குதல்
Submarine attack sinks Iranian ship near Sri Lanka; 78 injured, over 100 missing ; ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் கொடூர தாக்குதல் 5வது நாளாக நீடிக்கிறது. கடந்த 28 ம் தேதி தொடங்கிய போர் தொடர்கிறது. ஈரானில் சுமார் 2 ஆயிரம் இடங்களை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் தீவிரப்படுத்தி உள்ளன.
பதிலடி கொடுக்கும் ஈரான்
இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. வளைகுடா பகுதிகளில் இருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் கடற்படை தளங்கள் மீதும், இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ள வளைகுடா நாடுகளும் ஈரானின் இலக்கில் இருந்து தப்பவில்லை.
ஈரான் போர்க்கப்பல்கள் மூழ்கடிப்பு
ஈரானை முடக்கும் வகையில், அந்நாட்டு கடற்படை கப்பல்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், வளைகுடாவில் ஈரான் போர்க்கப்பல்களை அமெரிக்கா தாக்கி, கடலில் மூழ்கடித்து உள்ளது. தற்போது வரை 17 ஈரானின் போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்திய பெருங்கடலில் தாக்குதல்
தற்போது இந்த சண்டை இந்திய பெருங்கடல் பகுதிக்கும் பரவி இருக்கிறது. நமது அண்டை நாடான இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே ஈரான் நாட்டின் போர்க்கப்பல் இன்று காலை மூழ்கடிக்கப்பட்டது. ஐரிஸ் டெனா ( IRIS Dena ) என்ற பெயர் கொண்ட இந்தக் கப்பல், Frigate வகை போர்க்கப்பலாகும்.
களத்தில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்
இலங்கையின் காலி துறைமுகத்தில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்தக் கப்பல் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரான் கப்பல் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.
ஈரான் கப்பல் மூழ்கடிப்பு, உதவிய இலங்கை
கப்பலில் இருந்த மாலுமிகள் உடனடியாக இலங்கையிடம் உதவி கோரினர். அதன்படி, இலங்கையின் இரண்டு கடற்படை இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே மூழ்கிக்கொண்டிருந்த ஈரானியப் போர்க் கப்பலான ஐரிஸ் டெனாவிலிருந்து 30 மாலுமிகளை மீட்டது. அவர்கள் இலங்கை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படனர்.
மனிதாபிமான அடிப்படையில் உதவி
இதனை இலங்கையின் கடற்படை செய்தி தொடர்பாளர் புத்திக சம்பத் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர், ''இந்த மீட்பு நடவடிக்கை கடல்சார் கடமைகளின் அடிப்படையில் நடந்துள்ளது. இந்திய பெருங்கடலில் எங்களுக்கான தேடல் மற்றும் மீட்பு பகுதிக்குள் நடந்ததால் நாங்கள் அவர்களை மீட்க உதவினோம்'' என்று தெரிவித்தார்.
100க்கும் மேற்பட்டோர் மாயம்
ஈரான் போர்க்கப்பலில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஈரானுக்கும், இந்தியாவுக்கும் இடையே அரபிக்கடல் உள்ளது. இந்த கடல்பகுதி வழியாகவே இந்தியா - மத்திய கிழக்கு நாடுகள் இடையே கடல்வழி வர்த்தகம் நடந்து வருகிறது.
இந்தியா வரை பரவிய போர்
இந்தியா - இலங்கை இடையே இந்திய பெருங்கடல் உள்ளது. தற்போது ஈரானின் போர்க்கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே இந்திய பெருங்கடல் பகுதி அருகே மூழ்கி உள்ளது. எனவே, ஈரான் சண்டை இந்தியா வரை வந்து விட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
===