

ஈரானில் உள்நாட்டு பிரச்சினை
Donald Trump About US Tariff on India : ஈரானில் நிலவும் மோசமான பொருளாதார சூழல் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதாகக் கூறி, அந்த நாட்டிற்கு அமெரிக்கா பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து கொடுத்து வருகிறது. ஈரானில் அரசுக்கு எதிரான கலவரத்தில் சுமார் 600 பேர் உயிரிழந்தனர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், அங்கு பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஈரான் வர்த்தகம் - 25% வரி
இந்தநிலையில், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளை அமெரிக்கா குறிவைக்க தொடங்கி விட்டது. ஈரானின் ஏற்றுமதி, இறக்குமதியை முடக்கும் விதமாக, வர்தக்கம் செய்யும் நாடுகள் மீது 25% வரியை அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்து இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவையும் அவர் பிறப்பித்துள்ளார்.
இந்திய பொருட்களுக்கு 75% வரி
ஏற்கனவே ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்திருந்தது. இந்நிலையில், ஈரானுடனான வர்த்தகத்தை முடக்க நினைக்கும் அதிபர் டிரம்ப், அந்நாட்டுடன் வணிகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் தற்போது 25 சதவீதம் கூடுதல் வரியை விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கூடுதல் வரி உடனே அமல்
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் நாட்டுடன் வணிகம் செய்யும் எந்த நாடாக இருந்தாலும், அவர்கள் அமெரிக்காவுடன் செய்யும் வர்த்தகத்திற்கு 25 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது மற்றும் இதுவே இறுதியானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - ஈரான் வர்த்தக உறவு
டிரம்பின் அறிவிப்பால் இந்தியப் பொருட்கள் மீதான மொத்த வரி 75 சதவீதத்தை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஈரான் இடையிலான வர்த்தக உறவு மிகவும் வலுவாக உள்ளது. 2024 - 2025ம் நிதியாண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சுமார் 1.68 பில்லியன் டாலராக, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 15 ஆயிரம் கோடியாக இருந்தது.
ஆர்கானிக் ரசாயனங்கள் மட்டும் 512 மில்லியன் டாலருக்கும், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் 311 மில்லியன் டாலருக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஈரானில் இருந்து மெத்தனால், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் உலர் பழங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய வரியால் இந்தப் பொருட்களின் விலை உயர்வதுடன், அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களின் விற்பனையும் கணிசமாக குறைந்து விடும்.