

வெனிசுலா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
அமெரிக்காவில் போதைப் பொருள் நடமாட்டத்திற்கு வெனிசுலாவே முக்கிய காரணம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார். இதற்காக அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளையும் விதித்த அவர், வரிகளையும் விதித்து அதிரடி காட்டினார்.
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்
இதற்கெல்லாம் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரொ அசைந்து கொடுக்காததால், யாரும் எதிர்பார்க்காத வகையில், வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரின் மீது அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப் படையினர் நேற்று முன்தினம் அதிகாலை தாக்குதல் நடத்தினர். ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் தொடுக்கப்பட்டது.
அதிபர் மதுரொ சிறைப்பிடிப்பு
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரொ (63) மற்றும் அவரது மனைவியை அமெரிக்க டெல்டா படையினர் சிறைபிடித்தனர். பின்னர், அவர்களை போர்க் கப்பலில் அழைத்துச் சென்றனர். அதிபர் மதுரொ நாடு கடத்தப்பட்டதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்க சிறையில் மதுரொ
இந்தநிலையில், மதுரொவும் அவரது மனைவியும் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் சிறை வைக்கப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கு
அவர்கள் மீது போதைப் பொருள் பயங்கரவாதம், அமெரிக்காவுக்குள் டன் கணக்கில் கோகைனை இறக்குமதி செய்தது மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
வீடியோ வெளியிட்ட அமெரிக்கா
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை எக்ஸ் தளத்தில் 61 விநாடிகள் ஓடும் ஒரு வீடியோவை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், மதுரோ அமெரிக்காவை வம்பிழுக்கும் காட்சிகளும், மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்ய நடத்தப்பட்ட அதிரடி சோதனைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அந்த வீடியோவில், வெனிசுலா மீதான தாக்குதல்கள் குறித்து ட்ரம்ப் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அப்போது, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத், “மதுரோ வம்பிழுத்தார், அதன் விளைவை அனுபவித்தார்” என்று குறிப்பிட்டார்.
உலக நாடுகள் கண்டனம்
அமெரிக்காவின் தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்ததாக வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு நாடுகள் தங்கள் கண்டனத்தையும், கவலையையும் பதிவு செய்து இருக்கின்றன.
ஐநா சபை கண்டனம்
ஐ.நா.பொதுச்செயலர் விடுத்துள்ள அறிக்கையில், “ வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்குமாறு துணை அதிபர் டெல்சி ராட்ரிக்ஸுக்கு (56) அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா கட்டுப்பாட்டில் வெனிசுலா
ஆனால் இதை ஏற்க அமெரிக்க மறுத்து வருகிறது. தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் தான் வெனிசுலா அரசு செயல்பட வேண்டும் என்பதில் அதிபர் டொனால்டு டிரம்ப் பிடிவாதமாக உள்ளார்.
==============