

நவம்பர் மாதத்தில் இடைத்தேர்தல் :
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண ஆளுநர்களுக்கான இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தான் சார்ந்திருக்கும் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபை (House of Representatives) மற்றும் செனட் சபை (Senate) ஆகிய இரண்டிலும் (GOP) பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டால், அமெரிக்காவின் ஒவ்வொரு 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய குடிமக்களுக்கு தலா $5,000 (இந்திய மதிப்பில் சுமார் ₹4.7 லட்சத்திற்கும் மேல்) வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மிக முக்கியம் வாய்ந்த தேர்தல் :
அமெரிக்க அதிபரின் 4 ஆண்டுகால ஆட்சிப் பொறுப்பின் பாதியில் (இரண்டாம் ஆண்டில்) இந்தத் தேர்தல் நடத்தப்படுவதால், இது 'இடைகால தேர்தல்' என்று அழைக்கப்படுகிறது.
அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தற்போதைய இரண்டாவது ஆட்சி காலத்தின் எஞ்சிய இரண்டு ஆண்டுகள் எவ்வாறு இருக்கும் என்பதை இந்த தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும்.
சட்டங்களை நிறைவேற்ற பெரும்பான்மை அவசியம் என்பதால் கவனம் பெறும் தேர்தல் :
அமெரிக்காவில் அதிபர் என்பவர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் சட்டம் இயற்றவோ அல்லது நிதி ஒதுக்கீடு செய்யவோ நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் கட்டாயம் தேவை.
ஒருவிழாய் நவம்பரில் நடைபெற உள்ள தேர்தல்களில் எதிர்க்கட்சி பெரும்பான்மை பெற்றுவிட்டால், தற்போதைய அதிபர் டிரம்பால் புதிய சட்டங்களையோ, வரிக் கொள்கைகளையோ அல்லது திட்டங்களையோ எளிதாக நிறைவேற்ற முடியாது.
அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சி முட்டுக்கட்டை போடும்.
டிரம்பின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சுமார் 240 மில்லியனுக்கும் அதிகமான வயது வந்தவர்கள் உள்ள நிலையில், அனைவருக்கும் 5,000 டாலர் வழங்க வேண்டுமெனில் ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிக செலவு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் ஒப்புதல் தேவைப்படும் என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
"குடியரசுக் கட்சி வென்றால் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள்; உங்களுக்கு $5,000 கிடைக்கும்" என்று டிரம்ப் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.
=================