
பட்டத்தை உறுதி செய்த வின்சென்ட் கீமர் :
Chennai Grand Masters Chess Tournament 2025 Winner : சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் நடைபெற்று வந்தது. போட்டியின் 9வது நாளான்று, கடைசி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 8-வது சுற்றின் முடிவிலேயே 6 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்திருந்தார் ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான வின்சென்ட் கீமர். கடைசி சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ரே ராப்சனுடன் மோதினார்.
வின்சென்ட் கீமர் அபாரம் :
இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய வின்சென்ட் கீமர் 41வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், இந்தத் தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும் லைவ்ரேட்டிங்கில் 2750.9 புள்ளிகளுடன் 10வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இந்திய வீரர்கள் டிரா :
இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி, கார்த்திகேயன் முரளி ஆகியோர் மோதிய ஆட்டம் 49வது நகர்த்தலின் போது டிரா ஆனது. அமெரிக்காவின் அவாண்டர் லியாங், இந்தியாவின் விதித் குஜராத்தி மோதிய ஆட்டமும் 31வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இந்திய கிராண்ட் மாஸ்டரான நிஹால்சரின், சகநாட்டைச் சேர்ந்த வி.பிரணவை 55-வது நகர்த்தலின் போது வீழ்த்தினார்.
பட்டம் வென்றார் வின்சென்ட் கீமர் :
கடைசி சுற்றின் முடிவில் வின்சென்ட் கீமர் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். நெதர்லாந்தின் அனிஷ் கிரி 5 புள்ளிகளுடன் 2வது இடமும், அர்ஜுன் எரிகைசி 5 புள்ளிகளுடன் 3வது இடமும் பிடித்தனர். கார்த்திகேயன் முரளி, நிஹால் சரின், அவாண்டர் லியாங், விதித் குஜராத்தி, ஜோர்டன் வான் பாரஸ்ட், வி.பிரணவ், ரே ராப்சன் ஆகியோர் முறையே 4 முதல் 10 இடங்களை பிடித்தனர்.
வின்சென்ட் கீமருக்கு ரூ.25 லட்சம் பரிசு :
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் 2025(Chennai GrandMasters 2025) தொடரில் மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வின்சென்ட் கீமருக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அத்துடன் 24 ஃபிடே சர்க்யூட் புள்ளிகளும் அவருக்கு கிடைத்தது. இந்த புள்ளிகள் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க : சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் : களமிறங்கும் முன்னணி வீரர்கள்
அனிஷ் கிரி, அர்ஜுன் எரிகைசி, கார்த்திகேயன் முரளி ஆகியோர் ஒரே புள்ளிகளை (6 புள்ளிகள்) பெற்றிருந்ததால் அவர்களுக்கு தலா ரூ.10.83 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
-----