
அத்துமீறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் :
Nainar Nagendran on Coimbatore School Issue : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வருவதோடு, தவறான முறையில் சீண்டி பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் காணொளி வெளியிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆசிரியர்களின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது :
இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில்(Kinathukadavu Government School Coimbatore) ஆசிரியர்கள் குடித்துவிட்டு வேலைக்கு வருவதும், மாணவிகளை தவறான முறையில் சீண்டி பாலியல் ரீதியாக அத்துமீறுவதாவும் கூறப்படுவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை :
பள்ளியில் புகார் அளித்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணையும் குறைத்துவிடுவார்கள் என்று மாணவிகள் காணொளியில் அச்சம் தெரிவித்து இருப்பது, அரசுப் பள்ளிகளில் பாலியல் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பதைத் தெளிவாக உதாரணம்.
வேலியே பயிரை மேய்வதா? :
வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கக் கூட திராவிட மாடல் ஆட்சியில் இடமில்லையா?
மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி? :
ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் கல்வி தரமாக இருக்காது என்ற தவறான எண்ணம் பொதுப்புத்தியில் இருக்கையில், தற்போது மாணவிகளுக்கு பாதுகாப்பும் இருக்காது என்று கருத்து உருவாகிவிடாதா? அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கைகழுவுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?
மேலும் படிக்க : தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டாம் : நயினார் வலியுறுத்தல்
முதல்வரே உடனே நடவடிக்கை தேவை :
'அப்பா' என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின்(CM MK Stalin), மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா? மேலும், தக்க விசாரணை நடத்தி கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” இவ்வாறு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
=====