
தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல்? :
Nainar Nagendran on DMK Government : மின் தேவையை சமாளிக்க தனியாரிடம் இருந்து 80,000 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள, தமிழக பாஜக தலைவர் நயனார் நாகேந்திரன், “தனியாரிடமிருந்து ரூ.80,000 கோடி செலவில் 2,200 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல்(TNEB Limited) செய்யவிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
பொதுமக்கள் மீது நிதிச்சுமை :
ஆட்சி அமைப்பதற்கு முன்பு குறைந்த விலையில் மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமக அரசு, அதற்கு நேர்மாறாக, மின்வாரியத்தை நஷ்டத்தில் தள்ளி, தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி, விலையை உயர்த்தி, மக்கள் மீதும் அரசு மீதும் நிதிச்சுமையை ஏற்றி வருகிறது. ஆட்சி முடியும் தருவாயில் அதிக தொகை கொடுத்து தனியாரிடம் மின்சாரம்(Private Electricity) வாங்குவது. மின்கட்டண உயர்விற்கு வழிவகுக்கும் என்பது ‘அறிவாலய’ அரசுக்கு தெரியாதா?
மக்களை இன்னலுக்கு ஆளாக்குவதா? :
தொடர்ச்சியாக மின் கட்டண உயர்வால் வாடி வரும் மக்களை மேன்மேலும் மின்சாரக் கட்டண உயர்வால்(TNEB Electricity Bill Hike) தாக்குவது முறையா? மாநிலத்தின் கடன் சுமையையும் மக்களின் மின்கட்டண சுமையையும் ஒருசேர உயர்த்தி தமிழகத்தை இருளில் தள்ளிவிட்டு வீண் பெருமை பேசலாமா? மாதம் ஒருமுறை மின்கட்டண கணக்கீடு என்று கொடுத்த வாக்குறுதியை மறந்து மக்கள் நலனைத் தூக்கியெறிந்த திமுக அரசுக்கு தனியாரிடமிருந்து ரூ.80,000 கோடிக்கு மின்சாரம் வாங்கும் திட்டத்தையும் தூக்கியெறிவதில் ஒன்றும் சிரமம் இருக்காது.
மேலும் படிக்க : ’பெண்களை ஏளனமாகப் பேசலாமா’?: திமுக அமைச்சர்களுக்கு நயினார் கண்டனம்
எனவே, தனியாரிடமிருந்து வாங்கும் திட்டம் ஏதுமிருந்தால் அவற்றை திமுக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
=================