
கர்நாடகா காங்கிரஸ் ஆட்சி
Karnataka CM Siddaramaiah on DK Shivakumar : கர்நாடகாவில் சித்தராமையை தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் பொறுப்பு வகித்து வருகிறார். 2023ல் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சித்தராமையாவும், சிவகுமாரும் முதல்வர் பதவிக்கு கடுமையான போட்டியில் ஈடுபட்டனர். ஆனாலும், கட்சி தலைமை கேட்டுக் கொண்டதால், சமரசம் ஏற்பட்டு, சித்தராமையா முதலமைச்சரானார், சிவகுமார் துணை முதலமைச்சரானார்.
முதல்வர் பதவி - மறைமுக காய் நகர்த்தல்
இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் மாற்றப்படலாம் என்று அப்போதே கூறப்பட்ட நிலையில், இதை உடைக்கும் முயற்சியில் சித்தராமையா ஈடுபட்டு வருகிறார். 5 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருப்பதே அவரது நோக்கமாக இருக்கிறது. அதேசமயம் முதல்வர் கனவில் டி.கே. சிவக்குமார் செயல்பட்டு வருகிறார்.
சித்தராமையாவின் அரசியல் வாரிசு
இந்தநிலையில், சித்தராமையாவின் அரசியல் வாரிசு என்று ஒருவரை அறிவித்து, அவரது மகன் யதீந்திரா சர்ச்சையை எழுப்பி(Yathindra Siddramaiah), கர்நாடக அரசியலில் புயலை கிளப்பி விட்டு இருக்கிறார். மூத்த தலைவரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான சதீஷ் ஜர்கிஹோளி தனது தந்தையின் அரசியல் வாரிசாக அவர் பரிந்துரை செய்திருக்கிறார். நவம்பர் மாதம் கர்நாடகாவில் தலைமை மாற்றம் என்ற யூகங்களுக்கு இடையே யதீந்திராவின் பேச்சு, விவாதங்களை கிளப்பி இருக்கிறது.
பெலகாவியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய யதீந்திரா, "சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் முடிவில் இருக்கிறார். இதுபோன்ற நேரத்தில், சித்தாந்த ரீதியாக முற்போக்கான சிந்தனை கொண்டவர்களை வழிநடத்தி வழிநடத்தக்கூடிய ஒரு தலைவர் நமக்குத் தேவை. அமைச்சர் ஜர்கிஹோளி தனது பணியை முழுமையான அர்ப்பணிப்புடன் செய்கிறார். அவர் தொடர்ந்து அப்படி செயல்பட வேண்டும்" எனக் கூறினார்.
மேலும் படிக்க : திவாலாகி வரும் கர்நாடக அரசு : பாஜக கடும் விமர்சனம்
சிவக்குமாரின் கனவு தகர்ந்ததா?
இதன்மூலம், சிவக்குமாரின் முதல்வர் கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்க யதீந்திரா முயல்வதாக கர்நாடக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்து விட்ட சிவக்குமார், கட்சி தலைமை எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவேன் எனக் கூறி இருக்கிறார்.
கர்நாடகாவில் ’நவம்பர் புரட்சி’
கர்நாடகா அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘நவம்பர் புரட்சி’, சித்தராமையாவை வீழ்த்துமா? அல்லது சிவக்குமாரை அரியணை ஏற்றுமா? என்பது விரைவில் தெரிந்து விடும்.