

மாணவிக்கு நேர்ந்த அவலம்
Annamalai Slams DMK on Coimbatore College Girl Student Case : கோவை விமான நிலையத்தின் பின்புறம், தனது ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் மாணவியிடம் பேசிக் கொண்டிருந்த நபரை தாக்கினர். பின்னர் மாணவியை கடத்தி சென்றனர்.
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, 3 பேரும் தப்பி சென்றனர். பின்னர் மாணவியின் ஆண் நண்பர் கொடுத்த தகவலின் அங்கு சென்ற போலீசார், தப்பியோடிய மூன்று பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு(POCSO Act) செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
குற்றவாளிகள் தேடுதல் வேட்டை
7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை விமான நிலைய பகுதியில் கல்லுாரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவிக்கு நேரிட்ட கொடூரம் - அதிர்ச்சி
இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
திமுக ஆட்சியின் அவலநிலை
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன.
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி
திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.
அரசை விமர்சித்தால் கைது!
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது.
முதல்வர் தலைகுனிய வேண்டும்
இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும், இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
======