

கோவை மெட்ரோ ரயில் திட்டம்
Coimbatore Metro Rail Project Update in Tamil : சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளை, மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு செய்தது. முதலில், திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, சத்தியமங்கலம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு என நான்கு வழித்தடங்களில், 144 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
இரு வழித்தடத்தில் மெட்ரோ
முதல்கட்டமாக, அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோடு என இரு வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டன. உத்தேசமாக, 10 ஆயிரத்து 740 கோடி ரூபாயில், 34.4 கிமீ துாரத்துக்கு, 32 நிறுத்தங்களை கொண்டடு வர திட்டமிடப்பட்டது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி குழுவினர் கள ஆய்வு செய்தனர்.
மத்திய அரசுக்கு தமிழகம் அறிக்கை
இத்திட்டத்துக்கு அனுமதி மற்றும் நிதியுதவி கேட்டு, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கு, தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை அனுப்பியது. அதை பரிசீலித்த மத்திய அரசு, 'மெட்ரோ ரயில்' கொள்கையை சுட்டிக் காட்டி, சி.எம்.பி., எனப்படும் (Comprehensive Mobility Plan) என்கிற முழுமையான நகர போக்குவரத்து திட்ட அறிக்கை தருமாறு கேட்க, கூடுதல் ஆவணங்களுடன் தமிழக அரசு மீண்டும் அறிக்கை அனுப்பியது.
மத்திய அரசு விளக்க கடிதம்
இந்தநிலையில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் சார்பு செயலாளர் சரோஜினி சர்மா, தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறையின் முதன்மை செயலருக்கு. மூன்று பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தவறான தகவல் பரவல்
மூன்றாம் பக்கத்தில் இருந்த தகவல்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பரவ விட்டு, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக, ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு பரப்பப்படுகிறது. திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் திட்டமிட்டு இந்த பொய் பரப்புரையை செய்து வருகின்றன.
மத்திய அரசின் கடிதம் - என்ன இருக்கிறது?
மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
* மத்திய அரசு, தமிழக அரசு இடையே 50:50 சதவீத நிதி ஒதுக்கீடு அடிப்படையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த, 16.2.2024 மற்றும் 29.11.2024 ஆகிய தேதிகளில் கடிதம் அனுப்பி, ஒப்புதல் கோரப்பட்டது.
* கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக, மெட்ரோ ரயில் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதலின் படி, விரிவான திட்ட அறிக்கை கவனமாக பரிசீலிக்கப்பட்டது.
* கோவை மாநகராட்சி பகுதியில் சராசரி பயண வேகம் மணிக்கு 21.7 கிமீ. உள்ளூர் திட்ட குழும பகுதியில் மணிக்கு 24.5 கிமீ பீக் ஹவர்ஸ் சமயத்தில், சராசரி வேகம் மணிக்கு 23.1 கிமீ. பயணிகளுடன் செல்லும்போது 14.09 கிமீ.க்கு சராசரி பயண நேரம் 27.96 நிமிடங்கள் பிடிக்கும்.
நகர்ப்புற வேகம் மணிக்கு 30 கி.மீ.
நகர்ப்புற வழித்தடத்தில் சராசரி வேகம் மணிக்கு, 30 கிமீ. மெட்ரோ ரயில் சராசரி வேகம் மணிக்கு 34 கிமீ. இதன்படி கணக்கிட்டால், சாலையில் இயக்கப்படும் வாகனங்களின் சராசரி வேகம், 'மெட்ரோ' வேகத்துக்கு இணையாகவே இருக்கிறது.
பயண தூரம் குறைவு
கார் பயணத்தின் சராசரி துாரம் 7.5 கிமீ. இரு சக்கர வாகன பயணம் 5.8 கிமீ. பேருந்து பயணம் 7.3 கிமீ. மினி பேருந்து பயணம் 6.6 கிமீ மட்டுமே.
இத்தகைய குறுகிய பயண துாரங்களில், பயணிகள் மற்ற போக்குவரத்து முறைகளில் இருந்து (கார், பஸ், இருசக்கர வாகனம்) மெட்ரோவுக்கு மாறினாலும், அவர்களுக்கு 2 முதல் 3 நிமிடங்கள் மட்டுமே பயண நேரம் குறையும்.
எனவே, பெரும்பாலான பயணிகள் மெட்ரோவுக்கு மாற விருப்பப்பட மாட்டார்கள்.
பயணிகள் எண்ணிக்கையும் குறைவு
கோவை மெட்ரோ திட்டம்(Coimbatore Metro Rail Project) 34 கிமீ துாரத்துக்கு திட்டமிடப்பட்டு, தினமும் 5.9 லட்சம் பயணிகள் செல்வார்கள் என, கணித்திருப்பது அதிகமாக தோன்றுகிறது.
ஏனெனில், சென்னை மெட்ரோ பேஸ்-1 (55 கிமீ) வழித்தடத்தில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 4 லட்சம் பயணிகளே சென்றுள்ளனர்.
கோவை மக்கள் தொகை 15.84 லட்சம்
விரிவான திட்ட அறிக்கையின் படி, கோவை மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை 15.84 லட்சம். தவிர, உள்ளூர் திட்ட குழும பகுதியில் வசிக்கும் மக்கள் 7.7 லட்சம்(Coimbatore Population for Metro Project). தற்போது முன்மொழிந்துள்ள மெட்ரோ வழித்தடங்கள் உள்ளூர் திட்ட குழும பகுதிக்கு சேவை அளிக்காததால், அப்பகுதி மக்கள் மெட்ரோவை பயன் படுத்த வாய்ப்பில்லை.
குறைவானவர்களே மெட்ரோவை பயன்படுத்துவர்
கோவை மாநகராட்சி பகுதி 257 சதுர கிமீ., பரப்பு கொண்டது. உள்ளூர் திட்ட குழுமம் 1,287 சதுர கி.மீ., பரப்பு கொண்டது. இது, மாநகராட்சி பரப்பை விட, ஐந்து மடங்கு அதிகம். அதனால், மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை கணிக்கப்பட்டதை விட, குறைவாக இருக்கவே வாய்ப்பு உள்ளது.
சாலைகளின் அகலம் குறைவு
மெட்ரோ வழித்த டத்தில் 79 சதவீத பகுதிகள், 20 மீட்டருக்கு குறைவாகவே அரசுக்கு சொந்தமான சாலைகள் உள்ளன. சில பகுதிகளில் 15 மீட்டருக்கும் குறைவாக உள்ளது. உக்கடம் முதல் கோவை ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பு வரை, இணைப்பு பாதை அமைக்க, சாலைகள் குறுகலாக உள்ளன.
கட்டிடங்களை இடிக்க வேண்டும் - மக்கள் பாதிப்பு
இதன் மூலம், மெட்ரோ வழித்தடத்தில் பல தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்று இருப்பதால், பல இடங்களில் கட்டடங்களை இடிக்க வேண்டிய சூழல் வரும். இது, அதிக செலவையும், பொதுமக்களுக்கு சிரமத்தையும் ஏற்படுத்தும்.
மூன்று ஆண்டுகளில் முடிக்க முடியாது
விரிவான திட்ட அறிக்கையில், மூன்று ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளது. இது, நடைமுறையில் சாத்தியமாகத் தெரியவில்லை.
மெட்ரோ கொள்கை 2017ன் படி, மக்கள் தொகை 20 லட்சம் மற்றும் அதற்கு மேல் உள்ள நகரங்கள் மட்டுமே, மெட்ரோ உள்ளிட்ட பெரிய அளவிலான பொது போக்குவரத்து திட்டங்களை திட்டமிட முடியும். மதுரையில் அந்த அளவு மக்கள்தொகை இல்லை.
கோவை மக்களின் எதிர்பார்ப்பு
கோவையை பொருத்தவரை தற்போது பயணிகள் தேவை என்பது, அதிவிரைவு பேருந்து போக்குவரத்து (Bus Rapid Transit System) தான்.
மெட்ரோ - துல்லியம் அவசியம்
மெட்ரோ திட்டங்கள் அதிக செலவு கொண்டவை. நீண்ட கால தேவையை கணக்கில் கொண்டு துல்லியமாக திட்டமிட்டு செயல்படுத்தினால் மட்டுமே லாபகரமாக இருக்கும். மக்களுக்கும் முழுமையான சேவை என்பது கிடைக்கும்.
திருப்பி அனுப்பி வைப்பு எதற்காக?
மேற்கூறிய விஷயங்களை கருத்தில் கொண்டு தான், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள், திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் குளறுபடி
இதன்மூலம் மத்திய அரசு திட்டத்தை நிராகரிக்கவில்லை. திட்ட அறிக்கையின் குளறுபடிகளால் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை இருக்கிறது என்ற உண்மை அம்பலமாகி உள்ளது.
================