
கரூர் உயிரிழப்பு
Edappadi Palaniswami About Karur Stampede Death Case : கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குறித்து வழக்கு தற்பொழுது சிபிஐ விசாரணைக்கு சென்றுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்த உண்மை சிபிஐ விசாரணையில் வெளிய வரும் என்று தவெக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் எதிர்பார்த்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி குறித்து
இந்நிலையில், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். பின்னர், பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் கரூர் விவகாரம் குறித்து முதலமைச்சர் விளக்கம் கொடுத்தார்.
பாதுகாப்பு கொடுக்க அரசு தவறி விட்டது
தவெக தலைவர் விஜய் பேசும்போது செருப்பு வந்து விழுந்தது குறித்து அவர் எதுவுமே சொல்லவில்லை. இந்தக் கூட்டத்துக்கு திமுக அரசு முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிர்ப் பலியைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறினார்.
எதிர்க்கட்சிகளுக்கு அநீதி
மேலும், இந்த அரசு எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியாகவும் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியாகவும்தான் பார்க்கப்படுகிறது. கரூர் கூட்டத்துக்கு முழுமையான பாதுகாப்பை காவல்துறை அளிக்காததாலும், இந்த அரசின் அலட்சியத்தாலும் 41 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே தவெக தலைவர் விஜய் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கலுக்கு பிறகுதான் கரூர் வந்தார். இதனால், ஏற்கெனவே நடந்த கூட்டத்துக்கு எவ்வளவு பேர் வந்தனர் என்பது காவல்துறை, உளவுத் துறை, அரசுக்கும் தெரியும். அதற்கேற்றவாறே இடத்தை ஒதுக்கியிருக்க வேண்டும் என்று கூறினார்.
அரசின் மீது சந்தேகம்
மேலும் பேசிய அவர், தவெக தலைவர் விஜய் கேட்ட இடத்தையும் ஒதுக்கவில்லை. மக்கள் பங்கேற்கும் அளவுக்கு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தால், உயிர் சேதத்தைத் தடுத்திருக்கலாம். அதனைச் செய்யவும் அரசு தவறி விட்டது என்று விமர்சித்தார். கரூர் பாதுகாப்புப் பணியில் 500 பேர் ஈடுபடுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பார்த்தேன். ஆனால், அந்தக் கூட்டத்தில் 500 காவலர்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
மேலும் படிக்க : கரூர் சம்பவம்:நடவடிக்கை எடுத்திருந்தால் தவிர்த்து இருக்கலாம்: EPS
முதல்வர், ஏடிஜிபி தகவலில் முரண்பாடு
500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக ஏடிஜிபி கூறினார். ஆனால், 600-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டதாக இன்று முதலமைச்சர் கூறுகிறார். இதிலேயே எவ்வளவு முரண்பாடு உள்ளது. இதனால்தான், இந்தச் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது’’ இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.
========