

அதிமுகவை பலவீனப்படுத்துகிறார்
Sengottaiyan on Edappadi Palaniswami family leading AIADMK : கோபிசெட்டி பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”அதிமுக மீண்டும் வெற்றிபெற வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றேன். அதற்கு பிறகு கழக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டேன். யார் என்னிடம் பேசினாலும் நடவடிக்கை எடுக்கும் நிலை இன்று உள்ளது. நிர்வாகிகள் நீக்கம் அதிமுகவை பலவீனப்படுத்தும் செயல்.
கோடநாடு சம்பவம் - குற்றவாளி யார்?
கோடநாடு கொலை சம்பவத்தில் யார் குற்றவாளி என்பதை நாடு தெரிந்துகொள்ள வேண்டும். எந்த சம்பவத்திற்கும் சிபிஐ விசாரணை கேட்கும் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு கொலை வழக்கு பற்றி சிபிஐ விசாரணை கேட்காதது ஏன்?. கொடநாடு விவகாரத்தை வைத்து யார் திமுகவின் பி டீம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
யாரால் முதல்வரானார் ஈபிஎஸ்?
ஓபிஎசை மட்டும்தான் முதலமைச்சராக ஜெயலலிதா அமர்த்தினார். நாங்கள் இல்லையென்றால் இபிஎஸ் முதல்வர் ஆகி இருக்க முடியாது. அம்மா மூலம் 3 முறை முதல்வர் ஆனவர் ஓபிஎஸ். ஆனால் கொல்லைப்புறமாக முதல்வர் பதவிக்கு வந்தவர் இபிஎஸ்.
அதிமுகவில் வாரிசு அரசியல்
சட்டமன்றத்தில் இபிஎஸ்-க்கு பின்னால் தான் அமர்ந்திருந்தேன். ஒருமுறை கூட என்ன குறை என்று இபிஎஸ் கேட்டதில்லை. எடப்பாடி பழனிசாமி கட்சி நடத்தவில்லை. மகன், மாப்பிள்ளை, மருமகன், அக்கா மகன் ஆகியோர்தான் அதிமுகவை நடத்துகின்றனர். அப்படி என்றால் இந்த இயக்கத்திற்காக தியாகம் செய்தவர்கள், உயிராக நேசித்தவர்கள், இந்த இயக்கத்தைப் பற்றி தெரியாதவர்களிடம் மண்டியிட வேண்டிய நிலை உள்ளது. வாரிசு அரசியல் குறித்து முன்னரே பேசியிருந்தால், அப்போதே கட்சியில் இருந்து நீக்கியிருப்பார்கள்.
அதிமுகவை இணைத்தது பாஜக
அதிமுகவில் நான் உட்பட ஆறு பேர் சென்று பாஜக கூட்டணியில் இணைக்கப்பட வேண்டும் என்று சொன்னோம். வெளியேறியவர்களை இணைக்கப்பட வேண்டும் என்று சொன்னோம். அங்கு என்ன நடந்தது என்று வெளியே நான் சொல்ல விரும்பவில்லை.
என்னை அழைத்தது பாஜகதான். அழைத்து இரு இயக்கங்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கூறியவர்கள் அவர்கள். நானும் அதையே தான் சொன்னேன். இயக்கம் ஒன்றிணைய வேண்டும். உங்களை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களை விட்டால் உங்களுக்கு வேறு வழி இல்லை என்று சொன்னேன்” இவ்வாறு பேட்டிளித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நீக்கம்
இந்த சந்திப்பின் போது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி. சத்யபாமா, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
====