
Nainar Nagendran on Morning Breakfast Scheme : நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தரம் உயர்த்தா விட்டால் பலனில்லை :
இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “காலையுணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை மட்டும் விரிவுபடுத்துவது பெரிதாக பலனளிக்காது. அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தாராபுரம் அரசுப் பள்ளி, பூனாயிருப்பு அரசுத் தொடக்கப் பள்ளியிலும் வழங்கப்பட்ட காலையுணவில் பல்லி விழுந்து கிடந்ததை, நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
காலையுணவு திட்டத்தில் குளறுபடிகள் :
காலையுணவில்(Kalai Unavu Thittam) நடக்கும் அனைத்து குளறுபடிகளையும் வரிசைப்படுத்த வேண்டுமென்றால் சீனப் பெருஞ்சுவர் போதாது என்பதே உண்மை. பிஞ்சுக் குழந்தைகளின் பசியாற்ற வேண்டிய காலையுணவில் புழு முதல் பல்லி வரை கிடக்கிறதே, அது விடியா அரசின் விழிகளுக்கு தெரியவில்லையா?
ஊட்டச்சத்து உணவா? ஊசிப்போன உணவா? :
ஊட்டச்சத்து மிக்கதாக இருக்க வேண்டிய உணவை நெடுந்தூரத்தில் இருந்து சமைத்துக் கொண்டு வந்து ஊசிப்போன உணவாக மாறவிடுவது தான் திராவிட மாடலின் சாதனையா?.
மேலும் படிக்க : ’பெண்களை ஏளனமாகப் பேசலாமா’?: திமுக அமைச்சர்களுக்கு நயினார் கண்டனம்
குளறுபடிகளை மறைக்க முடியுமா? :
உணவு எனும் பெயரில் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம், அரசுப் பள்ளியில் படிப்பது ஏழை எளிய குழந்தைகள் தானே என்ற அலட்சியமா? அல்லது, போலி விளம்பரங்களின் மூலம் காலையுணவில் நடக்கும் குளறுபடிகளை மறைத்துவிடலாம் என்ற எண்ணமா? இவ்வாறு நயினார் நாகேந்திரன் எச்சரித்து இருக்கிறார்.
==========