
கழிவறைகளை சுத்தம் செய்ய ரூ.1,000 கோடி :
Nainar Nagendran on Chennai Municipal Toilet : இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை மாநகராட்சியின் 1,260 இடங்களில் உள்ள 10,000 பொதுக் கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.620 கோடியும், ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் உள்ள பொதுக் கழிவறைகளைத் தனியார் மயமாக்குவதற்கு ரூ.430 கோடியும் என திமுக ஆட்சியில் இதுவரை சுமார் ரூ.1000 கோடி செலவிடப்பட்டும் பொதுக் கழிவறைகளின் தரம் மிக மோசமாக உள்ளது தெரிய வந்திருக்கிறது.
கழிவறைகளில் அடிப்படை வசதி இல்லை :
தற்போதுள்ள முக்கால்வாசி பொதுக் கழிவறைகள் தண்ணீர், கதவு, தாழ்ப்பாள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தரையெல்லாம் கறைபடிந்து, துர்நாற்றம் வீசுகின்றன என்பது திமுக அரசின் ஊழல் முகத்தை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
காணாமல் போன மகளிர் கழிவறைகள் :
2023ல் மகளிர் நலனுக்காக ரூ.4.5 கோடி நிதி செலவில் அறிமுகப்படுத்தப்பட்ட “ஷீ டாய்லெட்" என்ற நடமாடும் மகளிர் கழிவறைகள், ஒராண்டுக்குள் காணாமல் போய் விட்ட நிலையில், மீதமிருக்கும் கழிவறைகளும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கிடப்பது மிகப்பெரும் சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்பது ஆளும் அரசுக்கு தெரியாதா?
அலங்கோல பராமரிப்புக்கு ஆயிரம் கோடியா? :
அலங்கோலமாகக் காட்சியளிக்கும் கழிவறைகளைப் பராமரிக்க ஆயிரம் கோடி ரூபாய் செலவானது என அரசு கணக்கு காட்டுவது யார் காதில் பூ சுற்றுவதற்காக? இவர்கள் கொள்ளையடிக்கும் மக்கள் பணம் யாருக்கு செல்கிறது, எங்கே செல்கிறது? ஊழல் முறைகேடுகளுக்குப் பெயர் போன திமுக, தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் கழிவறையிலும் கொள்ளையடித்து கஜானாவை நிரப்பிக் கொள்ள துணிந்துள்ளது அருவருக்கத்தக்கது. இந்த ஆட்சியை அரியணையில் இருந்து அகற்றினால் மட்டுமே தமிழகம் புத்துணர்வு பெறும்” இவ்வாறு தனது அறிக்கையில் நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran) கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் படிக்க : நெல்லை ஆணவப் படுகொலை : வழக்கை மூடி மறைக்க முயலும் காவல்துறை