
மதிமுகவில் உச்சக்கட்ட மோதல் :
Mallai Sathya Protest Against MDMK Vaiko : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது மகனும், முதன்மைச் செயலாளருமான துரை வைகோ ஆகியோருக்கும், கட்சியின் துணை பொதுச் செயலாளரான மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இரு தரப்பினரும் மாறி, மாறி குற்றம்சாட்டுகின்றனர்.
மல்லை சத்யா உண்ணாவிரதம் :
மல்லை சத்யாவை துரோகி என்று விமர்சித்த வைகோ(Vaiko on Mallai Sathya), அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற முடியாமல் தவித்து வருகிறார். வைகோ, துரை வைகோவை சாடினாலும் மதிமுகவில் இருந்து மல்லை சத்யா வெளியேறவில்லை. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் மல்லை சத்யா, மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் கோரியும், வைகோவை கண்டித்தும் சென்னையில் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.
தொண்டன் பக்கம் சமூகம் நிற்கிறது :
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா(Mallai Sathya Press Meet), “ பொதுவாக ஒரு தலைவன், கட்சி என்று வருகிற போது, ஒரு தொண்டனின் பக்கம் நிற்காத பொது சமூகம், முதன் முதலில் ஒரு தொண்டனின் நியாயத்தை எடுத்துச் சொல்லி இருப்பது காயம்பட்ட மனதுக்கு மருந்தாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. எனவே தமிழ் கூறும் நல்லுலகம் எங்களின் இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்.
என் அரசியலின் முகவரி வைகோதான் :
என் அரசியல் முகவரி வைகோ தான். நான் கண்டதும் கொண்டதும் வைகோ மட்டுமே. மதிமுக பயணம் என்ற பெயரில் நான் இன்னமும் துணை பொதுச் செயலாளர் தான். அவர்கள் என்னை நீக்கவில்லை, நானும் இன்னும் விலகவில்லை. மதிமுகவில் எனது பயணம் தொடரும்.
தோல்வியை தழுவிய துரை வைகோ :
நான்கு ஆண்டுகளாக துரை வைகோ எனக்கு எதிராக பெரிய போராட்டத்தை நடத்தி தோல்வியை தழுவினார். இறுதியாக எனது தலைவரை (வைகோ) முன்னிறுத்தி செய்து வருகிறார். தந்தையாக அவர் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் ஒரு அரசியல் தலைவராக மதிமுகவில் வைகோ தோற்று இருக்கிறார் என்பதுதான் உண்மை.
மேலும் படிக்க : மல்லை சத்யா உண்ணாவிரதம் : வைகோ அதிருப்தியாளர்களுக்கு அழைப்பு
மதிமுகவில் நீடிக்கிறேன் :
அவர்கள் சமரசத்திற்கு வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்திருக்கிறார்கள். இது எனக்காக வந்த கூட்டமல்ல, துரை வைகோவை பிடிக்காதவர்கள் தான் இங்கு வந்திருக்கிறார்கள். இந்த போராட்டம் வைகோவை எதிர்த்து அல்ல, நாட்டு மக்களிடம் நீதி கேட்பதற்காக. மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகத்தை வைகோ பாதுகாக்க வேண்டும். இந்த கட்சியில் தான் நான் தொடர்ந்து நீடிக்கிறேன்” இவ்வாறு மல்லை சத்யா பேட்டியளித்தார்.
=====