
ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் :
OPS About CM MK Stalin Meet : அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை நடத்தி வருகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். பாஜக மூலமாக அதிமுகவில் இணைய அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி பழனிசாமி முறியடித்து விட்டார். எந்த நிபந்தனையும் இன்றி சேருவதற்கு தயார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பகிரங்கமாக தெரிவித்தாலும், அதை ஏற்க எடப்பாடி தயாராக இல்லை. இந்தநிலையில், தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்க்கு அனுமதி கிடைக்கவில்லை.
ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு :
இதனால், விரக்தி அடைந்த அவர், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்(OPS Meets MK Stalin). நடைப் பயிற்சியின் போது, காலையில் இந்த சந்திப்பு நடைபெற, மாலையில் முதல்வர் இல்லத்திற்கு சென்றும் ஓபிஎஸ் சந்தித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக திமுகவில் ஓபிஎஸ் இணைவார், தனிக்கட்சி தொடங்கி திமுகவுடன் கூட்டணி வைப்பார் என்ற பேச்சுக்கள் எழுந்தன.
முதல்வரை சந்தித்தது பற்றி விளக்கம் :
இந்தநிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஓ. பன்னீர்செல்வம், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும் பண்பாடு.
அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தேன். இதேபோன்று அவரது மூத்த சகோதரர் மு.க.முத்து மறைவு(MK Muthu Death) குறித்து இரங்கல் தெரிவித்தேன். இந்தச் சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை.
திமுகவின் B Team கிடையாது :
ஆனால், இந்தச் சந்திப்பை வைத்து என்னை திமுகவின் ‘பி’ டீம் (B Team) என்றும், நான் திமுக உடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், திமுகவில் இணையப் போவதாகவும் பல்வேறு வதந்திகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். இதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதா ஆட்சியே இலக்கு :
என்னைப் பொறுத்தவரையில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் பயணிப்பவன். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதுதான் எங்களின் நோக்கம் என்பதையும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் படிக்க : OPS Manadu: மதுரையில் மாநில மாநாடு : தனி வழியில் பயணிக்கும் ஓபிஎஸ்
மக்களுக்காக குரல் கொடுப்பேன் :
நான் எங்கு இருந்தாலும், தமிழக மக்களின் உரிமை, தமிழக மக்களின் நலன் என்று வந்துவிட்டால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படக் கூடியவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்து இருக்கிறார்.
=====