
நீதிமன்றம் வரை சென்ற பாமக மோதல் :
PMK General Body Meeting 2025 : பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுவனர் ராமதாஸ், அவரின் மகன் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி இடையேயான மோதல் நீதிமன்றம் வரை சென்று விட்டது. நிர்வாகிகள் நீக்கம், நியமனத்தில் இருவரிடமும் இருந்த மோதல், கட்சியின் பொதுக்குழு வரை நீடிக்கிறது.
தனித்தனியாக பொதுக்குழு :
அன்புமணி தனியாகவும், ராமதாஸ் தனியாகவும் பொதுக்குழுவை கூட்டி இருக்கிறார்கள். இதில் அன்புமணி கூட்டம் பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக்கோரி, உயர்நீதிமன்றத்தை நாடினார் ராமதாஸ். இதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, அன்புமணி(Anbumani) பொதுக்குழுவை நடத்த தடையில்லை என்று உத்தரவிட்டார்.
அன்புமணி தலைமையில் பொதுக்குழு :
இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்(PMK General Body meeting) நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என அழைப்பிதழ் அனுப்பப்பட்ட அனைவரும் கலந்து கொண்டனர். பொதுக்குழுக் கூட்ட பேனரில், ராமதாஸ் புகைப்படம் இடம்பெற்று இருந்தது.
ராமதாசுக்காக மேடையில் நாற்காலி :
ராமதாசுக்காக(Ramadoss) பொதுக்குழு கூட்ட மேடையில் காலி இருக்கை விடப்பட்டுள்ளது. பாமகவின் 46 ஆண்டு கால வரலாற்றில் ராமதாஸ் இல்லாமல் நடக்கும் பாமகவின் பொதுக்குழு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக பொதுக்குழு தீர்மானங்கள் :
* பாமக தலைவராக அன்புமணி தான் மேலும் ஓராண்டு தொடருவார். 2026 ஆகஸ்டு வரை அவர் பதவியில் நீடிப்பார்.
* பாமக பொருளாளராக திலகவதி, பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன் தொடர்வார்கள்
* தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். விடுதலை நாள் அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.
* சமூகநீதி கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கண்டனம்.
* வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றால் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
* காவிரி, கொள்ளிடம், பாலாறு ஆகிய ஆறுகள் இடையே தடுப்பணை கட்ட வேண்டும்.
* அன்புமணி மேற்கொண்டு இருக்கும் மக்கள் உரிமை மீட்பு பயணத்தையும் அதன் நோக்கத்தையும் வெற்றி பெற செய்ய பாமக உறுதி ஏற்கிறது.
* தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்காகும்.
* தமிழ்நாட்டில் நான்கு முறை உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்கப்பட வேண்டும்.
* தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து தமிழக அரசு விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
* தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த கல்வி திட்டம் நிதி ₹2,151 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
* அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. உடனடியாக தமிழக அரசு ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரம் உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். 10,500 பேராசிரியர் பணியிடங்களில் 9000 இடங்கள் காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க : ”ராமதாஸ், அன்புமணியை வரச்சொல்லுங்க” : உயர்நீதிமன்றம் உத்தரவு
* உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற விளம்பர திட்டங்களை விடுத்து பொது சேவை வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
* அரசு துறைகளில் காலியாக உள்ள 6.5 லட்சம் இடங்களை நிரப்ப இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு பாமக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
===================