தூத்துக்குடியில் திட்டங்கள் தொடக்கம்: அடிக்கல் நாட்டுகிறார் மோடி
பிரதமர் மோடி தமிழகம் வருகை :
PM Modi Visit Tamil Nadu : பிரிட்டன் மற்றும் மாலத்தீவு நாடுகளில் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று இரவு தூத்துக்குடி வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. துாத்துக்குடி விமான நிலையத்தில், 450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனைய கட்டடத்தை நாட்டிற்கு அர்பணிக்கிறார்.
தூத்துக்குடி விமான முனையம் :
17,340 சதுர மீட்டரில், நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையம்(Thoothukudi Airport Terminal), ஆண்டுக்கு, 20 லட்சம் பயணிகளை கையாளும் திறன் உடையது. இதனால், தென்மாவட்டங்களில், சுற்றுலாவும், முதலீடும் அதிகரிக்கும்.
நான்கு வழி, ஆறு வழிச்சாலைகள் :
விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை(Vikravandi Thanjavur Highway) வழித்தடத்தில், 2,350 கோடி ரூபாய் செலவில், 50 கி.மீ., நீளத்திற்கு சேத்தியாத்தோப்பு - சோழபுரம் நான்கு வழிச்சாலை; 200 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள துாத்துக்குடி துறைமுக சாலையின் ஆறு வழிப்பாதை ஆகியவற்றை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில்(Thoothukudi VOC Port), 285 கோடி ரூபாயில், ஆண்டுக்கு, 69 லட்சம் டன் சரக்குகளை கையாளும் திறனில் அமைக்கப்பட்டுள்ள, வடக்கு சரக்கு தளவாட நிலையம் 3-ஐ அவர் திறந்து வைக்கிறார்
ரயில் பாதைகள் அர்ப்பணிப்பு :
மதுரை - தேனி மாவட்டம் போடிநாயக்கனுார் ரயில் பாதையில், 90 கி.மீ. தூரம் மின்மயமாக்கல், நாகர்கோவில் டவுன் - கன்னியாகுமரி பிரிவின் 21 கி.மீ. இரட்டைப் பாதை, ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் சந்திப்பு 12.87 கி.மீ. மற்றும் திருநெல்வேலி - மேலப்பாளையம், 3.6 கி.மீ., பிரிவுகளின் இரட்டை பாதைப்பணிகள் 1,165 கோடி செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இவற்றையும் நாட்டிற்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்.
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் :
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்படும் தலா, 1,000 மெகாவாட் திறன் உடைய மூன்றாவது, நான்காவது அணு உலைகளில் இருந்து மின்சாரத்தை வெளியே கொண்டு செல்வதுடன், மின் வழித்தட பணிக்கு, பிரதமர் மோடி(PM Modi) அடிக்கல் நாட்டுகிறார். இவற்றின் திட்டச் செலவு 550 கோடி ஆகும்.
மேலும் படிக்க : கங்கைகொண்ட சோழபுரம் வருகிறார் மோடி : வரலாற்று தலத்தின் சிறப்புகள்
திருவாதிரை விழாவில் நாளை பங்கேற்பு :
துாத்துக்குடியில் நிகழ்ச்சிகளை முடித்த பின், திருச்சி செல்லும் பிரதமர் மோடி, இரவு அங்கு தங்குகிறார். கங்கைகொண்ட சோழபுரத்திற்கு நாளை செல்லும் அவர், முதலாம் ராஜேந்திர சோழனை(Rajendra Cholan 1) கவுரவிக்கும் வகையில், நினைவு நாணயம் வெளியிடுகிறார். சோழபுரம் கோவிலில் நடக்கும், ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.
===