
Rajinikanth in Ilaiyaraaja Felicitation Ceremony : பிரிட்டன் தலைநகர் லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்தார் இசையமைப்பாளர் இளையராஜா. புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ரா இசைக் குழு, ஓர் இந்தியரின் முழு சிம்பொனியை இசைத்தது முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவின் இசைச்சாதனைப் போற்றும் வகையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இளையராஜாவுக்கு செப்டம்பர் 13 ஆம் தேதி(Ilaiyaraaja Felicitation Ceremony Date) மாபெரும் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இந்த விழாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை ஏற்கிறார். இது தமிழ்த் திரையுலகமே திரளும் திருவிழா என்றாலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள, கன்னட, இந்தி திரையுலக பிரபலங்களும் இளையராஜா விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இதையொட்டி அன்றைய நாளில் வெளிநாட்டில், வெளியூரில் நடக்கும் அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு திரையுலகில் உள்ள அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விழாவில் பாராட்டிப் பேசுவோர் பட்டியலில் நடிகர்கள் ரஜினி,கமல் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இருவரும் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதற்கு அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் கலந்துகொள்வது குறித்து எந்த உறுதியான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.
மேலும் படிக்க : ஏ.ஆர் ரஹ்மான் இளையராஜாவிடம் உதவியாளராகப் பணிபுரிந்தாரா?
நடிகர் விஜய்(Actor Vijay) தற்போது அரசியல் கட்சித்தலைவராக உள்ளதால் அவருக்கு மேடையில் பேச வாய்ப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகமே என்றும் கூறப்படுகிறது. மேலும் மேடையில் பேசுவோருக்கு மட்டும் தனிப்பட்ட அழைப்பு விடுக்கப்படும் என்றும் மற்றவர்களுக்கு ஒட்டுமொத்த அழைப்பாக அந்தந்த சங்கங்களின் வழியாக அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
பாராட்டு விழாவில் ஏற்புரை நிகழ்த்த உள்ள இளையராஜா, சிம்பொனி இசையை இசைத்து விருந்தும் படைக்க உள்ளார்.