
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த செவிலியர்கள்:
SC Slams TN Govt on Contractual Nurse Salary Issue : தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். 2015ம் ஆண்டு 7,743 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டும். 10 ஆண்டுகள் ஆகியும் 4,000 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
நிரந்தரம் செய்யப்படாத ஒப்பந்த செவிலியர்கள்
ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படும் செவிலியர்களுக்கு முதல் கட்டத்தில் மாதம் ரூ.7,700 ஊதியம் வழங்கப்பட்டது(Contractual Nurse Salary). தொடர்ந்து, ரூ.14 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.18 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இதுவே, நிரந்த செலிவியர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை ஊதியமாக கிடைக்கிறது.
உயர் நீதிமன்றம் உத்தரவு, தமிழக அரசு மேல்முறையீடு
தங்களுக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று ஒப்பந்த செவிலியர்கள்(Contractual Nurse Case) தொடர்ந்த வழக்கில், நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது.
தமிழக அரசு மீது அதிருப்தி :
நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து உள்ளது. இலவசங்கள் கொடுக்கப் பணம் இருக்கும் தமிழக அரசிடம், ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க பணம் இல்லையா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மத்திய அரசை குறை சொல்லாதீங்க :
மத்திய அரசிடமிருந்து உரிய பணம் கிடைக்காததால் ஒப்பந்த செவிலியர்களின் ஊதியம் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு வாதிட்டது. அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள் என தெரிவித்தது.
அரசின் கடமையை செயல்படுத்துக
ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு என குறிப்பிட்ட நீதிமன்றம், அதை எக்காரணத்தைக் கொண்டும் தட்டிக் கழிக்க முடியாது எனவும் தெரிவித்தது. நாட்டிலேயே சிறந்த மாநிலம் என்று கூறும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை ஏன் இப்படி இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பியது.
மேலும் படிக்க : பணி நிரந்தரம் செய்க! : மதுரையிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
நோட்டீஸ், பதிலளிக்க உத்தரவு :
மேலும், இந்த விவகாரத்தில் பதிலளிக்க மத்திய அரசு, தமிழ்நாடு MRB செவிலியர் அதிகாரமளிப்பு சங்கத்திற்கு(Medical Services Recruitment Board) நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நான்கு வாரங்களுக்குள் இருதரப்பினரும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைத்தது.